இனவாத அரசின் கைகூலிகள் தேர்தலில் ஒதுங்கிக் கொள்ளவேண்டும் – இரா. துரைரெட்ணம்

20200702 133811
20200702 133811


அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மாவட்டங்களில் தமிழர்களுக்குரிய பிரதிநிதிகளை குறைப்பதற்காக வாக்குகளை பிரிப்பதற்காக போட்டியிடுகின்ற இனவாத அரசின்  கைகூலிகள் இந்த தேர்தலில் இருந்து தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒதுங்கிக் கொள்ளவேண்டும் என ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார் . 
வடக்கு கிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை அதிகரிப்பதற்கான செயல்வடிவங்களை ஜனாதிபதி வழங்கியுள்ளாரா? கிழக்கு தொல்பொருள் செயலணியில் எந்த தமிழரையும் ஜனாதிபதி நியமிக்கவில்லை இந்த செயலானது கூடுதலாக பௌத்த ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான செயல்வடிவத்தை எடுத்துக் காட்டுகின்றது .
எனவே இந்த செயலணியில் பெரும்பான்மையான பௌத்த மதத்தை சார்ந்த  இனரீதியான அதிகாரிகளை நியமித்ததன் காரணமாக தமிழ் மக்களுக்கு அவர்களிடம் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை.  ஆகவே ஜனாதிபதி பௌத்த ஆதிக்கம் தொடர்பான விடயங்களில் மேலாதிக்கத்தை செலுத்துவதை விட கிழக்கு மாகாணத்தில் 40 வீத தமிழர்கள் 37 வீத முஸ்லிம்கள் 23 வீதம் சிங்களவர்கள் வாழ்கின்றனர். எனவே  அதற்க்கு ஏற்றவாறு பிரதிநிகளை இக்குழுவில் அங்கம்பெற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 வருட ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழர்களுக்குரிய அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கே தமிழர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் வாக்குபலம். இந்த வாக்குப்பலத்தை ஒவ்வொரு தமிழர்களும் வாக்குச் சாவடிக்கு சென்று எழுபத்தைந்து என்பது விகிதத்திற்கு மேல்  வாக்களித்துக் கொள்ள வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். 
கடந்த காலங்களில் தமிழர்கள் ஐம்பத்தியிரண்டு ஐம்பத்தொன்பது  விகிதத்திற்கு மேல் வாக்களிப்பது மிக  குறைவாகவே இருந்து  வந்தனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் தமது விகிதாசாரத்திற்கு ஏற்றாற் போல வாக்களிக்காத பட்சத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். 
ஒரு பதவிக்காகவோ ஒரு பட்டத்திற்காகவோ ஒரு அமைப்பாளராகவோ ஒரு மேலதிக செயலாளராகவோ நியமனம் பெறுவதற்காக நீங்கள் கைக்கூலிகளாக செயற்படும் பட்சத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என நீங்கள் வருந்தக் கூடாது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கவேண்டுமாயின் தமிழர்கள் பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
இனவாத அரசாங்கத்தின் கைகூலிகளாக தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தாங்கள் ஒதுங்கிக் கொள்வது சாலச்சிறந்தது. அப்படியில்லாத பட்சத்தில் அந்த மக்கள் அதற்குரிய தீர்ப்பை  அளிப்பார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள  74 விகித தமிழர்கள் 4 தமிழ் ஆசனங்களை பெற வேண்டும். இந்த ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே உண்டு.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கு அண்ணளவாக நாற்பது நாற்பத்தைந்தாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற வேண்டும். எந்தவித கைக்கூலிகளும் இந்த வாக்குகளை எடுப்பதற்கான சூழல்கள் இல்லை ஆகவே தமிழ் பேசும் தமிழர்களாகிய நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக வாக்குகளை எடுத்து நான்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
பௌத்த மேலாதிக்கம் கிழக்கு மாகாணத்தில் வேருன்றியிருக்கின்ற காலத்தில் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத் துறையில் சிரே

ட பல செயலாளர்கள் பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள். 
கிழக்கு மாகாணசபைக்கு அனுபவமுள்ள தகைமையுள்ள பல தமிழ் அதிகாரிகள் இருக்கையில் அவர்களை நியமிக்காமல் பல அமைச்சுக்களிலும் அலுவலகங்களிலும் பொதுச்சேவை ஆணைக்குழு பொதுநிர்வாக அமைச்சு போன்றவற்றில் சிரேஷ்ட தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருப்பது சிங்கள மேலாதிக்கத்தை அமுல்படுத்துவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.
எனவே ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களையும் சமனாக பார்ப்பீர்களானால் இன ஐக்கியத்தை பேணக்கூடியவராக இருந்திருந்தால் மூவின மக்களும் கிழக்கு மாகாணத்தில் ஐக்கியமாக வாழவேண்டுமாக இருந்தால் நிர்வாக ரீதியாக தெரிவு செய்யப்படுகின்ற அதிகாரிகள் விகிதாசார அடிப்படையிலும் திறமை அடிப்படையிலும் நியமனத்தை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அலுவலகங்களில் நியமனங்களை தருவதாக விண்ணப்பப்படிவங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த செயற்பாடானது தேர்தல் விதிமுறைக்கு எதிரான ஒரு செயற்பாடாகும். இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்