ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சிக்காதீர்! மஹிந்த அமரவீர

hqdefault

“தற்போதைய நிலைமையில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சித்து அந்த வாய்ப்பை இல்லாமலாக்கிக்கொள்ள வேண்டாம். சந்தர்ப்பத்தைப் பாதுகாத்துக்கொள்வது ‘தாமரை மொட்டு’ கட்சி வேட்பாளர்களின் பொறுப்பாகும்.” என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அகுனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்வரும் பொதுத் தேர்தல்  மிகவும் முக்கியமான தேர்தலாகும். இதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறுவது உறுதியாகும். எனினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்று உறுதியான அரசு அமைப்பதே எமது இலக்காகும். அதற்கு நாங்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சிப்பவர்கள், தங்களுக்குள் இருக்கும் வேதனையிலே அவ்வாறு செயற்படுகின்றனர் என்பது எமக்குத் தெரியும்.

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சிப்பவர்களில் அதிகமானவர்களின் தாய் கட்சியாக இருப்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும். அவர்கள் முதலாவதாக நாடாளுமன்றம் சென்றது இந்தக் கட்சியில் இருந்து என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” – என்றார்.