கோணேஸ்வரம் கோயில் அல்ல விகாரை என்கிறார் மேதானந்த தேரர்

02 3

“திருகோணமலையில் அமைந்துள்ள பாடல்பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம். ஆனால், அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்படவேண்டும். இதனைச் செய்தாலே போதும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவ மேதானந்த தேரர் தெரிவித்தார்.

இராவணன் என்ற மன்னன் இலங்கையை ஆண்டான் என்பது வெறும் கட்டுக்கதை என்று சில தினங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த எல்லாவ மேதானந்த தேரர், தற்போது இந்துக்களின் புனித தலமான கோணேஸ்வரம், கோகண்ண விகாரை என்று புதுக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொல்பொருள் ஆய்வு நடத்தவேண்டிய 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. வனப்பகுதிகளிலும் தொல்பொருள்கள் உள்ளன. இவை தேசிய மரபுரிமைகளாகும். அனைத்து விடயங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். எனவே, செயலணியின் பணி எப்போது முடிவடையும் என்று உறுதியாக கூறமுடியாது. ஆனால், கூடியவிரைவில் செய்துமுடிக்குமாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்பொருள் என்பதை தேசிய மரபுரிமையாகக்கருதி அனைவரும் பாதுகாக்கவேண்டும். குறிப்பாக பொலனறுவையிலுள்ள சிவன்கோவில் எமக்குரியது அல்லாவிட்டாலும் அதனை நாம் பாதுகாக்கின்றோம்.

கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது. இதற்காக நாம் கோவிலை இடித்து விகாரை கட்டமாட்டோம். ஆனால், அப்பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்பட வேண்டும். இதனைச் செய்தாலே போதும்.

எமது செயலணி தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளால் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன” – என்றார்.