போதைப்பொருள் விவகாரம்: கைதான அதிகாரிகளின் சொத்து தொடர்பில் விசேட விசாரணை
போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் வசமிருந்த போதைப்பொருளை, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் விநியோகித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள், கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபருக்கு அதிக பெறுமதி கொண்ட 4 இடங்கள் சொந்தமாகவுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் 21 அதிகாரிகளின் சொத்து விபரங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேக நபர்களின் வங்கி கணக்குகள் அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த வங்கி கணக்குகள் தொடர்பில் விரிவான அறிக்கை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினுடன் இணைந்து செயற்பட்ட சந்தேக நபர்களின் 7 வாகனங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் போதைப்பொருளுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.