போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையை விசேட விசாரணை பிரிவினூடாக மேற்கொள்ளுமாறு பொலிஸ் போதைப்பொருள் பணியகம், பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 18 பேர் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 2 இன்ஸ்பெக்டர்கள், 3 உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள், 5 பொலிஸ் சார்ஜன்கள் மற்றும் 8 கான்ஸ்டபிள்கள் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு இந்த விடயத்துடன் தொடர்புகள் காணப்படுகிறதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.
யாரேனும் ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புகள் காணப்படுமாயின், அவரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.