போதை பொருள் வர்த்தகம் தொர்பில் தற்போது தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பணியக பிரதி காவற்துறை பரிசோதகரின் வீடு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளினால் இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.மினுவங்கொடையில் பிரதேசத்தில் உள்ள வீட்டிலே இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக 4 சுயாதீன சாட்சியாளர்கள், கொழும்பு பிரதான நீதவானிடம் இரகசிய வாக்குமூலத்தை வழங்கியுள்ளனர்.
இன்று காலை சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு அதிக நேரம் அவர்கள் இரகசிய வாக்குமூலம் வழங்கியதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.சிவில் பிரஜைகள் 4 பேர் குறித்த வர்த்தகம் தொடர்பில் அவர்கள் அறிந்த தகவல்களை வெளியிடுவதற்கு தமது உத்தியோகபூர்வ அறையில் இன்று காலை முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய கொழும்பு பிரதான நீதவான் சாட்சியாளர்களை தமது உத்தியோகபூர்வ அறைக்கு அழைத்து சென்று குறித்த வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.