பொதுத் தேர்தல் – 4ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு இன்று

Ballot paper poll 1

பொதுத்தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நான்காவது நாள் தபால் மூல வாக்களிப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறுகிறது.

அதற்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் இன்றும் நாளையும் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த இரு நாட்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள், இம்மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக ராஜாங்கனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேச செயலாளர் பிரிவினைத் தவிர்ந்த ஏனைய சகல பகுதிகளிலும் கடந்த திங்கட்கிழமை முதல் ஏழு நாட்கள் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

அதற்கமைய கடந்த திங்கட்கிழமை சுகாதார சேவைகள் அதிகாரிகளும் நேற்று மற்றும் நேற்று முன்தினம் மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படைகள் முகாம்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலகங்கள் தவிர அனைத்து பொது நிறுவனங்களின் ஊழியர்களும் வாக்களித்திருந்தனர்.

இதேநேரம் இம்முறை 705,085 வாக்காளர்கள் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.