கறுப்பு உடையணிந்த இராணுவம் இடையூறு: எதற்கும் அஞ்சமாட்டேன் ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்

unnamed

முழுக்கறுப்பு சீருடையணிந்த இராணுவத்தினர் பிரசாரத்தைக் குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இத்தகைய செயற்பாடுகளினால் தன்னை அச்சப்படுத்த முடியாது எனவும் தேர்தல் காலத்தில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் நகல்கள் பிரதமருக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “2020,ஜூலை-28 அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி வியப்புக்குரியது. யாழ்ப்பாணம், குருநகரில் இரவு 8 மணியளவில் நான் தேர்தல் பிரசார மேடையில் இருந்தபோது, முழுக் கறுப்புச் சீருடை அணிந்த 14 இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வண்டிக்கு இருவராக கூட்ட அரங்கிற்குள் தடதடவென்று பெரும் சத்தத்துடன் நுழைந்தனர்.

வாகன எஞ்சின்களை அலறவிட்டுத் தொல்லை கொடுத்தனர். நான் புறப்படும் வரை காத்திருந்தனர். பிறகு என் கார் புறப்பட்டபோது 14 ஆட்களுடன் 7 மோட்டார் சைக்கிள்களுடன் என் காரைச் சுற்றிச்சுற்றி வந்தனர். கொஞ்சநேரம் ஓரத்தில் நின்றுவிட்டு என் கார் செல்லும் பாதையில் குறுக்கிட்டனர்.

பிறகு ஒரே வரிசையில் சென்று ஒரு பக்கச் சந்தில் போய் மறைந்தனர். என் காவல் பொலிஸார் என்னுடன் காருக்குள்ளேயே இருந்தனர். இந்த இராணுவத்தினர் எனக்கு எதையாவது உணர்த்த விரும்பினார்களா என்று தெரியவில்லை.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் என்னைப் போன்ற வயதான ஒருவரை மிரளச் செய்துவிட மாட்டாது என்றபோதிலும் மக்களுக்குத் தவறான செய்தியை வழங்கி வாக்களிப்பு நடைமுறையைப் பாதிக்கக்கூடும்.

இந்தச் சம்பவம் குறித்துப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். வட மாகாணத்தில் 2020 நாடாளுமன்றத் தேர்தல் இராணுவத்தின் இருப்பினால் பாதிப்பு ஏற்படாமல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என்றும் நம்புகிறேன்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1
1