வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் குரல் ஒருமித்து ஒலிக்கவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னும் கிடைக்கவில்லை சுமந்திரன் 720x450 1

தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் ஒரே குரலாக ஒலிக்கவேண்டும், அது ஒரு பலமான குரலாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அச்சுவேலியில்   இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

”இந்தத் தேர்தலிலே நாம் ஒரு குரலாக ஒலிக்கவேண்டும் என்று விரும்புகின்றோம். தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் ஒரே குரலாக ஒலிக்கவேண்டும் என்று நாம் கேட்கின்றோம். அது ஒரு பலமான குரலாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அப்படியான ஒரு தேவை இன்று அத்தியாவசியமானதாக இருக்கின்றது.

கடந்த சில நாள்களாக தென்னிலங்கையிலிருந்து வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது, அவற்றிலே குறிப்பாக காபந்து பிரதமர்  மஹிந்த, ஏதோ நாம் கொடுப்பவற்றை வாங்கித் திண்பவர்கள் போல பேசிக்கொண்டிருக்கின்றார்.

நாங்கள் எமது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நாளிலிருந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள எமது அரசியல் நிலைப்பாட்டைப் பார்த்து, “அதெல்லாம் தர முடியாது, சமஷ்டி என்றால் நாம் விட்டுக்கொடுக்கமாட்டோம், அரசியல் தீர்வு என்ற ஒன்றும் இல்லை, நாம் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியைக் கொடுப்போம்” என்று ஏதோ தாங்கள்தான் எங்களுக்கானதைத் தீர்மானிப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தத் தேர்தலிலே நாங்கள் கொடுக்கின்ற செய்தி என்னவாக இருக்கவேண்டும், இப்படியான சூழலிலே. எங்களைப் பற்றி   நாங்கள் தீர்மானிப்போம், எங்கள் தலைவிதியை நாங்கள் நிர்ணயிப்போம், நீங்கள் அதைச் செய்யவேண்டிய தேவை கிடையாது என்று முகத்தல் அடித்தால் போல் நீங்கள் தேர்தலிலே வாக்களிக்கவேண்டும். இன்றைய தேவை அதுதான். அது ஒரு பலமான அடியாகவும் இருக்கவேண்டும்.

ஒட்டுமொத்தமாக – தமிழ் இனம் ஒன்றாக – வடக்கிலையும் கிழக்கிலையும் 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குகின்ற அந்த வாக்கினால்தான் அந்தச் செய்தியை அந்த அழுத்தமாக – இறுக்கமாக முகத்தில் அடித்தால் போல் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொல்ல முடியும்.

அதனை எங்களுக்காகச் செய்யவேண்டும். எங்களுடைய தன்மானத்துக்காகச் செய்யவேண்டும். எங்களுடைய பிறப்புரிமையை நிலைநாட்டுவதற்காகச் செய்யவேண்டும். இன்று அதைச் செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதைவிட வேறு வழி கிடையாது. வேறு எந்தவொரு தமிழ் கட்சிக்கும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றுக்கு அனுப்புகின்ற திராணி கிடையாது.

மாற்று அணி என வந்துள்ளவர்களை நீங்கள் திருப்பிப் பார்க்கூடாது. அவர்கள் எல்லாம், ஆசன ஆசைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிப்போனவர்கள். அத்தோடு இன்னுமொரு அணியிருக்கிறது, இளைஞர்களுக்கு அரச வேலைபெற்றுத் தருவதாக விண்ணப்பப் படிவம் வாங்கியிருப்பார். அதற்கு நீங்கள் விலைபோய்விடக் கூடாது.

இந்தத் தேர்தலிலே டக்ளஸ் தேவானந்தா வெற்றிபெறக் கூடாது, அங்கஜன் இராமநாதன் நாடாளுமன்றுக்குப் போகக் கூடாது. அப்படி அவர்கள் போவதாக இருந்தால், வடக்கிலையும் கிழக்கிலையும் வாழுகின்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்ச்சியாக ஒரு கேள்விக்குறியாக இருந்துகொண்டிருக்கும்” – என்றார்.