ஆளும் கட்சி 60 வீதமான வெற்றியினை பொதுத்தேர்தலில் ஈட்டும் : கனக ஹேரத்

images
images

“தேசிய புலனாய்வு பிரிவின் பிரகாரம் ஆளும் கட்சி 60 வீதமான வெற்றியினை பொதுத்தேர்தலில் ஈட்டும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதில் சிறியளவில் வித்தியாசம் காணப்படும்” என பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இவ்வாறானதொரு பாரிய வெற்றிக்கு வாய்ப்பாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலை நகரில் நடைபெற்றது கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

“எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள 2020 நாடாளுமனறப் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி 60 வீதமான வெற்றியை ஈட்டும் என தேசிய புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது . ஆனால் 65 வீதத்தை தாண்டினால் மாத்திரமே தனி பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஜனாதிபதி கோட்டாபயவின் திட்டங்கள் மற்றும் அவரது தீர்மானங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனவே எமது வெற்றி இலக்கை அடைவது கடினமான விடயமல்ல. கேகாலை மாவட்டத்தை பொறுத்த வரையில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இங்கு வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை. அனைத்து இன மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே அரசாங்கத்தின் திட்டங்கள் அமைந்துள்ளது.

அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் நாங்கள் முழு அளவில் செயற்பட்டுள்ளோம். இளையோருக்கான தொழில் வாய்ப்புகள் அடுத்து வரும் எமது ஆட்சியில் அதிகமாக உருவாக்கப்படும். அதற்கு ஏற்ப நவீன தொழில் நுட்ப பயிற்சிகளும் பெற்றுக்கொடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.