கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தமது தொழிலை இழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தாயகம் திரும்ப விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு சகல விதமான உதவிகளையும் வழங்க பணியகம் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவ அதிகாரிகள் அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு மாற்று வேலைகளை தற்காலிகமாக வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டார் அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் மூலம், அங்கு வேலையை இழந்தவர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, வேறு பல நாடுகளில், குறிப்பாக பாரசீக குடா நாட்டு அரச நிர்வாகங்களுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்வேறு நாடுகளில் தற்போது உள்ள சுமார் 15 ஆயிரம் இலங்கையர்கள் நலன் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.