அனைத்து தேர்தல் சட்டங்களும் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும்!

0 2
0 2

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர் அனைத்து தேர்தல் சட்டங்களும் அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, வாக்குகளை கோரி வீடுகள் தோறும் செல்லல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், கிளை அலுவலகங்களில் பிரசார பதாகைகள் காட்சிப்படுத்தல் உள்ள அனைத்து வகையான தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் ராஜாங்கனை பகுதிக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அடையாள அட்டை விநியோகமும் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் தினம் இரவு வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தேர்தல் அதிகார பகுதியில் தலா இரண்டு பேர் என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளுக்கும், வாக்கெண்ணும் நிலையக வளாகத்தில் தமது பிரதிநிதிகளை வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.