கொழும்பு துறைமுக ஊழியர்கள் கடந்த சில தினங்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக துறைமுக சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டாம் எனவும் அதன் நடவடிக்கைகளை துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் கொண்டுவருவமாறும் கோரி, துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்குமுனையை பாதுப்பதற்கான ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரால் கடந்த சில தினங்களாக சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து சத்தியாகிரக போராட்டம் கடந்த புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கோரிக்கையை முன்வைத்து துறைமுகத்திற்கு முன்பாக பாரிய ஆர்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு 23 தொழிற்சங்கங்கள் ஆதரவளித்திருந்தன. துறைமுகத்தில் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிற்சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். எனினும் நேற்றைய தினமே இவ்விடயத்தில் பிரதமர் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.