முல்லைத்தீவு மாணவியை வன்புணர்ந்த மதகுருவுக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை!

0856b2ca8cf240bcc2048f7ecc9743ae

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் மதகுருவின் வீட்டில் கற்பதற்காக தங்கியிருந்த சிறுமியை வல்லுறவிற்குள்ளாக்கிய குற்றத்திற்காக மதகுருவுக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மீள்குடியேற்றத்தின்போது முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் குடியேறிய குடும்பத்தினை சேர்ந்த 17 வயது சிறுமி தனது உயர் தர வகுப்பினை கற்பதற்காக உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் தொடர்ந்திருந்தார். இதன்போது தங்கி நின்று கற்பதற்காக இடப்பெயர்வின் போது செட்டிகுளம் முகாமில் அறிமுகமான மதகுருவின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 வயதுடைய சிறுமியை குறித்த மதகுரு துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

5 பெண்பிள்ளைகளின் தந்தையான 48 வயது மதகுரு தனது வீட்டில் தங்கியிருந்த சிறுமியை வன்புணர்ந்த குற்றத்திற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் 2019 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 20 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விசாரணைகள் இடம்பெற்று கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் மதகுருவாக இருந்தும் தன்னைவிட வயதுகுறைந்த பாதிக்கப்பட்ட பிள்ளையின் சம்மதத்தின் பெயரில் இக்கற்பழிப்பு சம்பவம் இடம்பெற்றதாக கூறி தனது சாட்சியத்தில் குறித்த குற்ற சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் குற்றவாளியாக காணப்பட்ட மதகுருவுக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் தண்டப்பணத்தினை செலுத்த தவறின் 6 மாத சாதாரண சிறைத்தண்டணையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 இலட்சம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்த தவறின் 24 மாத சாதாரண சிறைத்தண்டனையும் வழங்கி மேல்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.