அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறு பிள்ளையானுக்கு அழைப்பு!

Pillaiyan
Pillaiyan

கண்டியில் நாளை நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறும் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பிள்ளையானுக்கு எந்த அமைச்சுப்பொறுப்பு வழங்கப்படும் என்றோ அமைச்சரவை அந்தஸ்து அல்லது அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்படுமா? என்பது குறித்து எதுவும் தெரியாது என்று பிள்ளையானுக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தலுக்கு முன்னர் தமது கட்சிக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என்று பொதுஜன பெரமுனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்ததாக பிள்ளையானின் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதேவேளை பிள்ளையானுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கி அவரை கண்டியில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்க செய்வது தொடர்பில் நேற்று கொழும்பில கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே பிள்ளையானுக்கு எதிராக சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.