தேசியப் பட்டியல் ஆசனம் சசிகலாவே எனது தெரிவு:மாவை!

download 17
download 17


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுமே அதிருப்தியளிக்கின்றது என தமிழரசுக்  கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

“தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்தேன். எனினும், கட்சியினதும் மற்றும் பலரது அறிவுரைகளின்படியே நான் அந்த நியமனத்தைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை விசாளருமான தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அவரது நியமனம் கட்சியினால் இடைநிறுத்தப்படவில்லை. கடந்த திங்கட்கிழமை இரவு வெளியாகியிருந்த அதிவிசேட வர்த்தமானியில் கலையரசனது பெயர் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பில் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கலையரசனது நியமனத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த முடிவை யார் எடுத்தார்கள் என்பது தான் எமது கேள்வி. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடாமல் இந்த முடிவு சம்மந்தமில்லாதவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

நான் இந்தத் தேசியப் பட்டியல் நியமனத்தைப் பெற்றுக்கொள்ள நினைத்திருக்கவில்லை. எனினும், தமிழரசுக் கட்சி மட்டத்திலும் எமது புலம்பெயர் கட்சி உறுப்பினர்கள் மட்டத்திலிருந்தும் தேசியப் பட்டியல் நியமனத்தை என்னைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியதன் பின்னரே நான் சம்மதித்தேன்.

எனினும், நான் சசிகலா ரவிராஜையே தேசியப் பட்டியலுக்காக பிரேகரிக்க இருந்தேன். கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆயினும், அந்த முடிவை கட்சியுடன் கலந்துரையாடாமல் சம்பந்தமில்லாத தரப்பினர் நடந்துகொண்ட விதமே அதிருப்தியளிக்கின்றது.

இதேவேளை, தேசியப் பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை மீளப் பெறுவதா அல்லது அதனையே அமுல்படுத்துவதா என்பது தொடர்பாக நாம் கட்சி மட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானிக்க முடியும்” – என தெரிவித்துள்ளார்.