ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் தெரிவிற்காக மேலும் 6 மாத கால அவகாசம் வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் செயற்குழு இன்று முற்பகல் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது.
இதன்போது, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்புரிமை என்பன தொடர்பாக இரண்டு மணி நேரத்திற்கும் அதிக காலம் கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் ஒருவரையே கட்சியின் அடுத்த தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என்பதே செயற்குழுவில் பெரும்பான்மையானோரின் கருத்ததாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, தற்போது தலைமைத்துவத்திற்காக பிரேரிக்கப்பட்டுள்ளவர்கள் பொறுப்புக்களை பகிர்ந்தளித்து, அவர்களின் தகைமையின் அடிப்படையில் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கு செயற்குழுவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக அவர்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படுவதுடன், அந்த காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவராக தொடர்ந்தும் பதவி வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்புரிமை தொடர்பில், இன்றைய செயற்குழுவில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என்றும் அறியமுடிகின்றது.