கூட்டமைப்பு சுகபோகம் அனுபவிக்கிறது -கூரே

reginold kure 1
reginold kure 1

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்து அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கோரியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோட் குரே தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவிலுள்ள சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இணைந்த அலுவலகத்தில் இன்று (Nov.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு, கிழக்கு மக்கள் பல ஆண்டுகள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்குபோராடி வருகின்ற நிலையில் கூட்டமைப்பினர் சுகபோகங்களை அனுபவித்து வருவதாகவும் ஐ.நா சபையில் மனித உரிமைகள் பற்றி பேசுகின்ற இவர்கள் மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்திற்கு பிறகு எந்த தமிழ் தலைமைகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவில்லை. இதனால் அந்த மக்களுக்கு வருமானம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றியில் பாதகமான நிலைமையே ஏற்பட்டது.

வடக்கு கிழக்கு மக்களை வறுமை நிலைக்குத் தள்ளிய யுத்தத்தை யார் ஆரம்பித்தது என்று அந்த மக்களுக்கு தெரியும். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ தான் யுத்தத்தை நிறைவு செய்து அபிவிருத்திகள் எதுவுமே அற்று கிடந்த வடக்கில் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்தார் என்பதும் மக்களுக்குத் தெரியும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கில் மஹிந்த ராஜபக்ஷவால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படவில்லை. கடந்த 4 வருடங்களில் இந்த அரசாங்கமும் எதையுமே செய்யவில்லை.

எனவே, இழந்த அபிவிருத்திகளை மீளப் பெறுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.