திருமலையில் சுவர் இடிந்து வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி

5 td
5 td

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் எனவும், அவரது சகோதரரான இரண்டு வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பரிதாப சம்பவம் கிண்ணியா 03, மாஞ்சோலைச் சேனை, ஆலீம் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ரணீஸ் முஹம்மது ஷான் (வயது 04) எனும் சிறுவனே இதன்போது உயிரிழந்துள்ளார் .

இவரது சகோதரான ரணீஸ் முஹம்மது தாஜ் (வயது 02) எனும் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உடைக்கப்பட்ட பழைய வீடொன்றின சுவருக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுவன் மீது அவ்வீட்டின் சுவர் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது என ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்து  மரணம் தொடர்பில் கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி கே. டி. நெஹ்மத்துல்லாஹ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.