உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேகநபர்களுக்கு காணொலி மூலம் விளக்கமறியல்

ARREST sattamani
ARREST sattamani

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் யூன் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று திங்கட்கிழமை (01) உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்த 64 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 59 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்படடுள்ளனர்.

இதேவேளை வெவ்வேறு வழக்கு இலக்கங்களை கொண்ட ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற் கொண்ட ஆசாத்தின் தாயார். உட்பட 4 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 68 பேரின் வழக்குகள் இன்று திங்கட்கிழமை (1) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் ஏனைய 63 பெரும் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அழைத்து வரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் 63 பேரையும் எதிர்வரும் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.