கிழக்கில் இருந்து புத்திஜீவிகள் நாடாளுமன்றம் செல்லவேண்டும் – சந்திரகாந்தா

chanthira 720x450 1

கிழக்கு மாகாணத்தில் கற்ற புத்திஜீவிகள் நாடாளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என்ற கோசம் இன்று எழுத்துள்ளது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி  சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்தில் இருந்து  நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவத்தின் அவசியத்தினை இன்று அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் கற்ற புத்திஜீவிகள் நாடாளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என்ற கோசம் இன்று எழுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி உட்பட பல பிரச்சினைகள் முடங்கிக்கிடக்கின்றன.கல்வி,பெண்கள் சார்ந்த பிரச்சினைகள்,இளைஞர்களின் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.அவற்றினை தீர்க்கவேண்டுமானால் கற்ற புத்திஜீவிகள் நாடாளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இன்று எழுந்துள்ள நிலைமையினை பார்க்கும்போது மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்றார்கள் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துகளும் இல்லை.இன்று இந்த மாவட்ட மக்கள் ஒரு விரக்தி நிலையில் உள்ளனர்.எமது மக்களுக்கான உரிமைசார்ந்த அபிவிருத்தியே இன்று தேவையாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் மத்தியில் 40வீதமான வாக்குகள் அளிக்கப்படாத நிலையிலேயே இருந்துவருகின்றது.இந்த வாக்குகளை நாங்கள் முடிந்தவரை அளிக்கவேண்டும்.எமது வாக்களிப்பு வீதத்தினை 80வீதத்திற்கு மேலாக அதிகரித்து எமது பிரதிநிதித்துவத்தினை கூட்டுவோம்.

நாங்கள் ஒருபேரம்பேசும் சக்தியாக மாறவேண்டும்.எமது பகுதியிலும் அமைச்சர்களை உருவாக்கவேண்டும்.இன்று இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சிகள் பல தங்களை பேரம்பேசும் சக்திகளாக அடையாளப்படுத்தியுள்ளன.வடக்கினை பொறுத்தவரையிலும் அங்கு அமைச்சர்கள் இருந்துகொண்டு அபிவிருத்திகளை செய்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ அபிவிருத்தி தொடர்பிலோ பேசுவதற்கு யாரும் இல்லை.இந்த சந்தர்ப்பத்தை தமிழர்கள் பயன்படுத்தவேண்டும்.அபிவிருத்தி சார்ந்த  நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவோம்.” என குறிப்பிட்டார்.