தன் மீதான குற்றசாட்டுக்களை மறுத்தார் இளம் சட்டத்தரணி!

court1

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணி மது போதையில் வாகனம் செலுத்தினார் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முன் வைத்த நிலையில் அவற்றை குறித்த சட்டத்தரணி மறுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ஊரடங்கு அமுலில் இருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த காரை மறித்து சோதனையிட முயன்றுள்ளனர்.

இதன்போது காரை நிறுத்தாது ஓட்டியவர் தொடர்ந்து ஓடிய போது பொலிஸார் காரை பின் தொடர்ந்து வழி மறித்தனர்.

அப்போது காரின் சாரதி இருக்கையில் இருந்தவர் தன்னை சட்டத்தரணி என அறிமுகம் செய்துள்ளார். இதன்போது அவர் மது போதையில் இருப்பதனை அறிந்து கொண்ட பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று வழக்கு பதிவு செய்தனர்.

சாரதி அனுமதி பத்திரமின்றி காரினை செலுத்தியமை, மது போதையில் காரினை செலுத்தியமை, பொலிஸாரின் சமிஞ்சையை மீறியமை, ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி சென்றமை,  ஊரடங்கை மீறியமை, முக கவசம் அணியாமை ஆகிய ஆறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வழக்கு பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று(புதன்கிழமை) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, சந்தேக நபரான சட்டத்தரணி முன்னிலையானார்.

அதன் போது பொலிஸார் முன் வைத்த குற்றசாட்டுக்கள் ஒவ்வொன்றாக சந்தேக நபருக்கு தனித்தனியே வாசித்து காட்டப்பட்டது. அதனை அடுத்து சந்தேக நபரான சட்டத்தரணி அத்தனை குற்றசாட்டையும் மறுத்து தான் சுற்றவாளி என மன்றுரைத்தார்.

 அதனை தொடர்ந்து சந்தேக நபரான சட்டத்தரணியை 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்த நீதவான் வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்தார்.