சிந்தித்து வாக்களியுங்கள் -வேலன் சுவாமிகள்

Velan Swamigal
Velan Swamigal

2020 பாராளுமன்றத் தேர்தலானது வடகிழக்கில் வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் தமது இருப்பிற்காக, நீதிக்காக தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தமிழ் மக்கள் இத்தேர்தலை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் உற்றுநோக்கி உங்கள் வாக்குரிமையை அறிவுபூர்வமாகவும் பொறுப்புணர்வோடும் பிரயோகிக்க வேண்டும்.

ஐனநாயக நாட்டில்  இடம்பெறும் தேர்தல்களில் வாக்காளர்கள் யாவரும் வாக்களிக்க வேண்டியது தார்மீகக் கடமையும் உரிமையும் ஆகும். எனவே கொரோனாவிற்குப் பயந்தோ அல்லது ‘யார் தெரிவு செய்யப்பட்டால் எமக்கு என்ன?’ எனும் விரக்தியினாலோ வாக்களிக்காமல் இருக்க வேண்டாம். உங்களுக்குரிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள். மனச்சாட்சிப்படி சரியானவர்களை, சிந்தித்துத் தெரிவு செய்யுங்கள். தேர்தல் தொடர்பான நெறிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.

நேரத்துக்கே காலையில் சென்று வாக்களியுங்கள். வாக்களிக்கச் செல்லும் போது சுகாதார நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள். அதேபோன்று ஏனையவர்களையும் வாக்களிப்பதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

தேர்தல் நேர்மையாக, சுமுகமாக நடைபெறவும், அதன் மூலம் தமிழ் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவும் ஆசி வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். என தவத்திரு வேலன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.