இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள்! தூதரகங்களுக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கடிதம்

download 19
download 19

இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும். என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கூட்டாக ஒப்பமிட்டுக் கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் கூட்டுக் கையொப்பங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

15 ஜனவரி 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு!

மாண்புமிகு தூதர்களே,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் தீர்க்கமான
நடவடிக்கை எடுக்குமாறு கோரல்!

இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு ஆயத்தமாகின்ற இவ்வேளையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட  பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஆகியோர் தரப்பு சார்பில் இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம்.

இலங்கையின் இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வாரகாலத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகத்தோடு 2009ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கை தனது சர்வதேச கடப்பாடுகளுக்கும், சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கும்
அமைவாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதை விசாரிப்பதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் வலியுறுத்தினார். இந்த முறைபாடுகளை விசாரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேற்சொன்ன உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கை எதுவும் எடுத்திராத பின்புலத்தில், இலங்கையில் நிகழ்ந்த ஆயுதப் போராட்டத்தின் இறுதிக்கட்டங்களில் எழுந்த மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் விடயங்களை ஆராய்வதற்கென்று, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி மூவரடங்கிய குழு ஒன்றை செயலாளர் நாயகம் நியமித்தார்.

நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கை 2011ஆம் ஆண்டு மார்சில் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இதன் பின்பு 2011ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இந்த அறிக்கையை செயலாளர் நாயகம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவரிடத்திலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடத்திலும் பாரப்படுத்தினார்.

பின்பு ஐ.நா. மனித உரிமைகள் சபை, இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல் என்ற19/02 தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்பின்பு இவ்விடயத்தை தன்னகத்தே வைத்திருந்து 2013ஆம் ஆண்டு மார்ச்சில், 2014ஆம் ஆண்டு மார்ச்சிளும் தீர்மானங்கள் நிறைவேற்றியது. மேலும், தீர்மானங்கள் 30/01 (ஒக்டோபர் 2015), 34/01 (மார்ச் 2017) மற்றும் 40/01(மார்ச் 2019) ஆகியவற்றுக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியது.

இலங்கையின் அரசியல் வெளியில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக அரசியல் தலைவர்கள், விதிவிலக்கு இல்லாமல், இலங்கையின் படைத்தரப்பினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாப்போம் என்று கூறி வந்துள்ளார்கள். ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாக இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இராணுவ மயமாக்கல், அரசியல் கைதிகளைக் காலவரையறையின்றி தடுத்து வைத்திருத்தல், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நில அபகரிப்பு, மேய்ச்சல் தரை போன்ற தமிழ் மக்களின் பாரம்பரியமானதும் கூட்டு நில உரிமைகளை மறுப்பது, அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களைக் கண்காணிப்பதைத் தீவிரப்படுத்துதல், கொரோனா நோயால் இறக்கும் முஸ்லிம் சகோதரரின் ஜனாஸா அடக்கத்தை மறுத்தல், நினைவேற்றல் உரிமையை மறுத்தல் போன்ற  தமிழ் மக்களுக்கு எதிராகத் தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறையானது மோசமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையை கோடிட்டுக் காட்டுகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் சபை எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தீர்மானம் 40/01 இன் கீழ் இலங்கை
அரசு உறுதிமொழி கொடுத்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்காகக் கூடுகையில் இவ்வாறான முடிவெடுத்து இறுதித் தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும்.

இந்தத் தீர்மானமானது, இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப்போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டது என்றும், இதனை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும்  பிரகடனப்படுத்த வேண்டும்.

நாம் பின்வருவனவற்றைக் கோருகின்றோம்:-

1) இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

2) ஐ. நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் இவ்விடயத்தை மேல் கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

3) ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகின்ற மீறுதல்களைக் கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.

4) மேலே 1) இல் கூறியதற்குப் பங்கமில்லாமல் ஐ. நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சீரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச் சேகரிக்கின்ற பொறிமுறை போன்றதொன்றை (கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு) ஏற்படுத்துதல்.

பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டுசெல்லப்படல் வேண்டும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்துகின்றோம்.

ஆகையால் இதுவரைக்கும் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தீர்க்கமாகவும் காலம் கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்துகின்றோம் – என்றுள்ளது.