பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும் அஞ்சப்போவதில்லை – சிவாஜிலிங்கம்

sivaji 1

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் வைத்து, எம்.கே.சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் வைத்து நானும், திருமதி அனந்தி சசிதரனும் பயணித்த வாகனத்தை பெரும்பான்மையினர் தாக்கினர்.

இவ்வாறு தாக்குதலை நடத்தியவர்களின் கைகளில் பெற்றோல் போத்தல்களை அவதானிக்க கூடியதாக இருந்தது. மேலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் இருந்த வேளையில்தான், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் விழ விழ எழுவோம், வீருகொண்டு எழுவோம் என்றதன் அடிப்படையிலேயே நாங்கள் இந்த பயணத்தை தொடர்வோம். மேலும் இத்தகைய தாக்குதலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

இந்த பேரணியை நடத்துவதற்கு எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை முறியடித்து பொலிகண்டி வரை நிச்சயம் முன்னேறி செல்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.