பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பயணம் இன்று கிளிநொச்சியில் நிறைவடைந்தது. கிளிநொச்சி டிப்போ சந்தியை வந்தடைந்த குறித்த பேரணிக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இரணைமடு சந்தியில் கூடிய ஆதரவாளர்கள் அமோக வரவேற்பளித்து பேரணியை வரவேற்றனர். குறித் பேரணியின் இன்றைய பயணம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் 7.30 மணியளவில் நிறைவு பெற்றது.
நாளை அதே இடத்திலிருந்து பொலிகண்டிவரை பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன் பின்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அண்மையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுளின் போராட்டம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற போராட்ட ஏற்பாட்டாளர்கள் அந்த மக்களை சந்தித்து உரையாடியதுடன், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வேலன் சுவாமி நீராகாரம் வழங்கி போராட்டத்தை முடித்துவைத்தார்.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்திப் போராடி வருபவர்களையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் சந்தித்தித்துக் கலந்துரையாடினர்.