இலங்கை இரண்டு மாநிலங்களாக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லும் நிலைமை வரும் என சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

109510112 m.k.sivajilingam01
109510112 m.k.sivajilingam01

இலங்கை இரண்டு மாநிலங்களாக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லும் நிலைமை வரும் என சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் பல பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்படும் போது தூங்கிக் கொண்டிருந்த தென்னிலங்கை தொழிற்சங்கவாதிகளும், ஜேவிபி போன்ற இனவாத சக்திகளும், கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவிற்கு கொடுக்கப்பட போகிறது என்றதும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்துகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

இதையடுத்து அந்த திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடுகிறது. யப்பான், இந்தியாவுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தங்களையும் இலங்கை கைவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுத்து விட்டார்கள். மேலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்கப்படவுள்ளது.

இந்த சூழலின் பின்னணியில்தான் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த சீன நிறுவனத்திற்கு வழங்கினார்கள். இந்தியாவிற்கு அதை வழங்கப் போவதாக கூறிவந்த நிலையில் தற்பொழுது சீனாவிற்குத்தான் வழங்கப் போவதாக நேற்று சொல்லியுள்ளனர்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் கபளீகரம் செய்யப்படுவதற்கு வல்லாதிக்க சக்திகளின் ஆதரவும் பெறப்படுகிறது.

குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் முதலாவது அத்தியாயத்தில், தமிழ் மக்களிற்கு அதிகார பகிர்வை வழங்குவதற்காக மாகாண முறைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டது.

இதனால்தான் 13வது திருத்தம் உருவாகி, மாகாணசபைகள் உருவாகின. ஆனால் மாகாணசபையில் உள்ள காணி, காவல்த்து அதிகாரங்கள் பகிரப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, இலங்கைத்தீவில் எந்த இடத்தையும் இந்தியாவிற்கு தெரியாமல் வெளிநாடுகளிற்கு வழங்கக்கூடாது என்ற விடயத்தை இந்தியா ஏன் இறுக்கமாக பின்பற்ற தவறுகிறது என்ற கேள்வி எழுகிறது.

உங்களிற்கு ஆபத்தென்றால் ஒப்பந்தத்தை தூக்கிப் பிடியுங்கள். மற்றவர்கள் வந்து ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்க்கிறீர்கள். உங்களுடைய பாதுகாப்பை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். அதற்கு ஈழத்தமிழர்கள் பக்கபலமாக இருப்போம்.

வடக்கு கிழக்கில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் திருப்பி அனுப்பப்படும்வரை போராட்டங்கள் நடக்கும்.

நீங்கள் இங்கே வந்தால், இந்தியா கோபமடைந்து போர் தொடுத்தால், 40 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்தான். ஆகவே, எந்த நிறுவனமென்றாலும், இந்தியாவிற்கு விரோதமான சக்திகள் இங்கு வந்தால் மோதல் பிராந்தியமாகி பாதிக்கப்படுவது ஈழத்தமிழர்கள்தான் எனவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, சீனாவிற்கு இந்த திட்டங்களை வழங்கும் முடிவை மீளப்பெறுமாறு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அல்லது, ஈழத்தமிழர்கள் சில விடயங்களை கையில் எடுப்பதை உங்களால் தடுக்க முடியாது. இப்பொழுது பாரதிய ஜனதா கட்சி இங்கு வரப் போகிறது என அலறி துடிக்கிறீர்கள். அந்த சட்டம் இந்த சட்டம் என கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.

உலகம் முழுவதும் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அப்படியென்றால் பாரதிய ஜனதா கட்சியென்ற பெயரில் இலங்கையில் ஏன் கட்சி ஆரம்பிக்க முடியாது?

நீங்கள் அதே சின்னத்தை வழங்காமல் விடலாம். பொதுஜன பெரமுன தாமரை பூ சின்னம் கேட்டபோது, தாமரை புத்தருக்கு படைக்கப்படும் மலரென, தாமரை மொட்டை கொடுத்தீர்கள். மொட்டு புத்தருக்கு படைக்கப்படுவதில்லையா?

உலகத்தில் பல நாடுகள் உடைத்து துண்டுதுண்டாடப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் இலங்கை இரண்டாக உடைக்கப்பட்டு, தமிழீழ மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சரும், சிறிலங்கா மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சரும் தெரிவு செய்யப்பட்டு எல்லோரும் டெல்லி பாராளுமன்றத்திற்கும், மேற்சபைக்கும், ராஜ்ஜிய சபைக்கும் செல்ல வேண்டுமென்பதை புரிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்குமான பிரச்சனையில், உக்ரேனின் கிரேமியா பகுதி ரஷ்யாவினால் உடைக்கப்பட்டு, சுயாட்சி பிரதேசமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சிவாஜிலிங்கம், இந்தியா, அமெரிக்காவிற்கு எதிராக இலங்கை செயற்பட்டால், அந்த நாட்டு படைகள் இங்கு வரும் நிலைமை ஏற்படும் எனவும் கூறினார்.