பா.ஜ.கவின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம் என அமைச்சர் சரத் வீரசேகர கருத்து

113967052 sarathweerasekara03
113967052 sarathweerasekara03

இந்திய பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் கட்சியாக உருவாக முடியாது. ஆனால் அவர்களின் பிரதிநிதிகளாக இலங்கையில் ஒரு கட்சி உருவாகி அவர்களின் கொள்கைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த எந்த தடைகளும் இல்லை. அனேகமாக பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித்சா கூறியதாக வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என எதுவும் இல்லை. நிகழ்வொன்றில் அவர் உணவு உட்கொண்ட வேளையில் அருகில் இருந்தவர்களுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான நாம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை என்னால் கூற முடியும். பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. அதற்கான அரசியல் அமைப்பு ரீதியிலான அனுமதியும் இல்லை. தேர்தல்கள் திணைக்களமும் அதற்கு அனுமதிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே இது ஒரு கதையாக வேண்டுமானால் கூறலாம்.

ஆனால் அவர்களினால் மறைமுக அரசியலில் ஈடுபட முடியும். அதற்கு அனுமதி இலங்கையில் உள்ளது. எவ்வாறெனின், இலங்கையில் உள்ள அரசியல் காட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியினூடாக இலங்கையில் அவர்களின் கொள்கையை பரப்பி அவர்களின் இலங்கை பிரதிநிதிகளாக இங்கு ஒரு கட்சி இயங்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றொரு கட்சியை அவர்களின் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் இன்றுவரை இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக முழு நிதியும் மேற்கு நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் மூலமாகவும், புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மூலமாகவும் கிடைத்து வருகின்றது.

தேசிய கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் கட்சியை உருவாக்கினாலும் வாக்களிக்க வேண்டிய கடமை மக்களிடம் உள்ளது.”மக்கள் ஆதரிக்க வேண்டுமே” என்றார்.