அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது; விரைவில் கட்டமைப்பு உருவாகும்- நா.உ சுமந்திரன்!

IMG 9538
IMG 9538

தமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல் வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகள், வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று (25) இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்ற கருத்தை நாங்கள் எல்லோருமே ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
அதனை மத தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அந்த அரசியல் ஒற்றுமையை எவ்வாறு வேகமாகவும், தீவிரமாகவும் நகர்த்துவது என்பது பற்றி ஒவ்வொரு கட்சிகளும் தமது தீர்மானம் எடுக்கும் கூட்டங்களிலே பேசி தீர்மானங்களை எடுத்தபின்னர் வெகுவிரைவில் ஒரு கட்டமைப்பாக முன்னேற குறித்த நடவடிக்கையை எடுப்போம்.

இக் கலந்துரையாடலில் எந்தவித முரண்பாடு இல்லாத நிலையிலும் அழைப்பு விடுக்கப்பட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் இது ஒரு தேர்தல் கட்டமைப்பே கிடையாது. இது இன்று தமிழர்களிற்கு ஒரு அத்தியவசிய தேவை அதனை பொறுப்போடு நாம் அணுக வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படுவதற்கு தேவையான ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம்.

ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பலநாடுகள் நடுநிலமையை பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக. இணை அனுசரணை வழங்கும் நாடுகள் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். அதைநீர்த்துப்போக செய்வதற்காகவே இலங்கை அரசு கட்டாய ஜனாசா எரிப்பு என்ற விடயத்தை நீக்கியிருக்கிறது. முஸ்லீம் நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை செய்திருக்கிறார்கள். எனினும் இஸ்லாமிய நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றமாட்டார்கள் என்று நம்புகிறோம். அதேபோல சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமல் போனவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் கன காலம் கடந்துஞானம் வந்ததுபோல இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகிறது என்றார்.