அதிகார ஆசையால் இலங்கையில் எதுவும் நடக்கலாம் – கரு ஜெயசூரிய எச்சரிக்கை

download 2 3
download 2 3

மியன்மாரின் ஜனநாயக விரோத இராணுவ அடக்குமுறையில் அந்நாட்டு இளைஞர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அதிகார மோகமே இதற்கான காரணமாகும், இந்த நிலைமை நாளை ஸ்ரீலங்காவுக்கும் வந்துவிடக்கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது அரசியல் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது, இவ்வாறான நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிகழ்கால செயற்பாடுகள், மாகாணசபை தேர்தலுக்கான நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கயைில்,

இன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளன. சுயாதீனம் என்ற பெயரில் மறைமுகமான அரசியல் அதிகாரமொன்று இயங்கிக்கொண்டுள்ளது.

அதிகார மோகத்தில் செயற்படும் ஒரு சிலர் அரசியல் தலைவர்களின் நோக்கங்களுக்கு இடமளிக்க கூடாது.

நீதிமன்ற சுயாதீனம் கூட இன்று பாரிய சவாலுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்த கூடாது.

இது நாட்டின் சுயாதீனத்தை கேள்விக்கு உற்படுதும். 20 ஆவது திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றிய சிலருக்குத்தான் இன்று மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலமாக குரல் எழுப்ப வேண்டும்.

மியன்மார் இன்று மிக மோசமான ஜனநாயக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கான புரட்சியில் பலநூறு பேர் இப்போது வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

அங்கு ஜனநாயக புரட்சி ஒன்று வெடித்துள்ளது. இன்று மியன்மாரில் நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளை எமது நாட்டிலும் நடந்துவிடக்கூடாது. அங்கு கொல்லப்பட்டுவரும் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவர்.

அங்கு அவ்வாறு ஜனநாயக விரோத செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால் ஸ்ரீலங்காவிலும் தற்போதைய ஜனாதிபதி அவ்வாறு செயற்படுவார் என கூற முயற்சிக்கவில்லை.

ஆனால் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம். இன்று ஸ்ரீலங்காவின் பயணம் ஆரோக்கியமானதல்ல என்பது தெளிவாக தெரிகின்றது.

20 ஆவது திருத்தம் இந்த நாட்டிற்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத ஒன்றாகும், அதனை ஏன் உருவாக்கினர் என்ற கேள்வி எம்மத்தியில் எழுந்துள்ளது.

இன்று சமூகத்தில் பல்வேறு முரண்பாடுகள் எழ ஆரம்பித்துள்ளது. இன்று அரசாங்கத்தில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலைப்பாடுகள் எழுந்துள்ளனர்.

யாரை நம்புவது, யார் உண்மையானவர்கள் என தெரியாத நிலைமை காணப்படுகின்றது. எனவே மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.