நிலாவரையில் தொல்லியல் திணைக்கள பணிகளை இளைஞர்களைத் திரட்டிவந்து தடுத்த தவிசாளர்!

nirosh
nirosh

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நிலாவரை பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்கு தடை ஏற்படுத்தினார் என தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பேசவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் காவல் நிலையம் அழைக்கப்பட்டார்.

அங்கு மல்லாகம் காவல்துறை வலயத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி ஜெயக்கொடி தலைமையில் அச்சுவேலி காவல் நிலைய பொறுப்பதிகாரி சுமுது பிரசன்ன, தொல்லியல் திணைக்களத்தின் யாழ் – கிளிநொச்சிக்குப் பொறுப்பான பணிப்பாளர் நளின் வீரதுங்க ஆகியோர் இருந்தனர்.

தவிசாளர் பெருமளவானவர்களைத் திரட்டி வந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிகளை தடைசெய்துள்ளார் என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதனால் அது பற்றி பேசவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர், தொல்லியல் திணைக்களம் எற்கனவே குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்யப்போவதாக கூறியிருந்தது. ஆனால் அவர்கள் கட்டிட அத்திவாரம் வெட்டுவது போன்று ஆழமாக கிடங்கினை வெட்டினர். ஆந்த இடத்தில் கட்டிடங்கள் ஏதாவது அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச சபைக்குரிய பொறுப்புணர்வு பார்வையியுடன் நான் சென்றேன். அப்போது என்னை இராணுவத்தினர் விசாரணை செய்தார்கள். இதனால் அங்கே சுமூகமற்ற நிலைமை ஏற்பட்டது. மக்கள் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளில் சந்தேகம் கொள்வதனால் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்பட்டே செயற்பட வேண்டும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தினேன்.

அதற்கு காவல்துறை தரப்பில் இருந்தும் தொல்லியல் திணைக்கள தரப்பிடம் இருந்தும் தொல்லியல் திணைக்கள சட்டத்தின் பிரகாரம் யாரிடமும் அனுமதிபெறவேண்டியதில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை எனவே இதில் தவிசாளர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது. அதற்கு தவிசாளர் நிலாவரை விடயத்தில் பிரதேச சபை பகிரங்க கேள்விக்கோரலில் கடந்த பலவருடமாக குத்தகைக்கு வழங்கி வருகின்றது.

எனவே எமக்கும் அப் பிரதேசத்தில் நிர்வாக ரீதியிலான அதிகாரம் உள்ளது என தவிசாளர் தெரிவித்தபோது, தாம் எமக்கு அதிகாரம் கிடையாது என கடிதம் அனுப்பியுள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரியினால் கூறப்பட்டது. அதற்குத் தவிசாளர் தனிச்சிங்களத்தில் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றது. நான் அதனை அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கு முறைப்பாடாக அனுப்பியுள்ளேன். வடக்குக் கிழக்கில் அரசகரும மொழிகள் தமிழ் என்பதையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற போது தொல்லியல் திணைக்கள அதிகாரி தாம் அரச அதிபருக்கே சிங்களத்தில் தான் கடிதம் அனுப்புவதாகவும் பெறுபவர்கள் அதனை மொழிபெயர்த்து புரிந்து கொள்வதாகவும் அலட்சியமாக தெரிவித்தார். தாம் யாழ் மாவட்டத்தில் சகல இடங்களிலும் பணிகளை செய்கின்றோம் அங்கு எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்குதான் பிரச்சினை என தொல்லியல் திணைக்களத்தினால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

மக்களிடத்தில் தங்கள் திணைக்களத்தின் பணிகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதனால் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் கட்டிடங்கள் திருத்தம், புதிதாக அமைத்தல் விடயத்தில் சபை அனுமதி பெறப்படவேண்டியது சட்டமாகும் எனவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது. எனினும் காவல்துறை தரப்பும் தொல்லியல் திணைக்களத் தரப்பும் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்குள் எவரும் தலையிடக்கூடாது எனவும் தவிசாளர் தான் மக்களை அழைத்து வந்து குழப்புகின்றார் என்றனர். தவிசாளர் ஒதுங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அதற்கு தவிசாளர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நீதிமன்றத்திற்கு விடயம் பாரப்படுத்தப்படுவதாக காவல்துறை தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் காவல்துறை தரப்பினால் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டிற்கான பதில் அறிக்கை தவிசாளரிடம் பெறப்பட்டது. அதன்போது தவிசாளர் யார் கூறி நிலாவரைக்கு வந்தார். நிலவரையில் நின்ற வண்ணம் யார் யாருடன் தொலைபேசியில் பேசினார், என்ன பேசினார் என தனிமனித சுதந்திரத்திற்குப் புறம்பான விசாராணைகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.