இலங்கைக்கு அடுத்துவரும் மூன்று மாதங்களில் ஒரு இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு பைசர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இந்தத் தகவலை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ கொரோனாத் தடுப்பூசி இலங்கைக்குக் கிடைக்கின்றது. மக்களுக்கு முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றதா? என்பதை ஆராய்ந்த பின்னர் இந்தத் தடுப்பூசி தொகையை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்தது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் ‘சீரம்’ நிறுவனத்திடமிருந்து கொரோனாத் தடுப்பூசிகள் கிடைத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து சீனாவிடமிருந்து 6 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைத்தன” – என்றார்.
இதேவேளை, அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் அமெரிக்காவின் ‘பைசர்’ நிறுவனத்துடனும், ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
அத்துடன், ஸ்புட்னிக் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய இலங்கை 13 மில்லியன் தடுப்பூசிகளையும், பைசர் நிறுவனம் மூலம் ஒரு மில்லியன் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளது.
இதனிடையே, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சு தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.