கைதிகள் கொல்லப்படுவதானது, ஐ.நா குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தும் – முஜிபுர்

mujibur rahuman
mujibur rahuman

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது பாரிய மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதானது அந்த குற்றச்சாட்டுக்களை மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் தனித்து விடப்படும் அபாயம் காணப்படுவதோடு, எமக்கான வரப்பிரசாதங்கள் சலுகைகளும் அற்றுப்போகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், குற்றச் செயல்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் இடம்பெற்ற போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனவே மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள்வதற்கு பதிலாக மீண்டும் மீண்டும் அதே தவறையே அரசாங்கம் செய்து வருகிறது.

தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் ஊடாக நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை தனித்துவிட செய்யும் செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையுமாகும்.

வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் இவ்வாறான கைதிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு , நீதிமன்றத்தின் ஊடாக அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து அரசாங்கம் கைதிகளை வேறுமுறையில் கையாளும் எனில் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

எனவே நாட்டின் நற்பெயருடன் இவ்வாறு விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு முன்னரும் இந்த அரசாங்கத்தின் மீது இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து மீள்வதற்கு பதிலாக தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் சர்வதேசத்திடமிருந்து எமக்கு கிடைக்கப் பெறும் சலுகைகள், வரப்பிரசாதங்கள் அனைத்தும் இல்லாமல் போகக் கூடும் என்றார்.