முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு: ஐ.நாவில்ஆவணப்படுத்துங்கள்! – மனித உரிமைகள் ஆணையாளருக்கு 15 தமிழ் நா.உறுப்பினர்கள் கடிதம்

pearl one news ஐ நா மனித உரிமை ஆணையாளர் copy
pearl one news ஐ நா மனித உரிமை ஆணையாளர் copy

கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது. எனவே, நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

என்று வேண்டுகோள் விடுத்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.

Screenshot 20210520 210200 Drive

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12ஆம் திகதி விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டது. இராணுவம்  மற்றும் காவற்துறை பாதுகாப்பில் இருந்த இந்தத் தூபி உடைக்கப்பட்டதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை வெளியிட்டனர்.

அத்தோடு நிறுத்தி விடாது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இதை ஆவணப்படுத்த  வேண்டும் என்ற முயற்சியில் கடிதம் தயாரிக்கப்பட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பம் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர்.

இந்தக் கடிதம் ஐ.நாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் மூலமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு  ஆவணப்படுத்தக் கோரிஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில்,  “2009 மே 18இல் முடிவடைந்த கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது. இது ஒரு வெட்கக் கேடான மனித குலத்துக்கு எதிரான செயற்பாடு.

உலகில் உள்ள எவ்வகையான வலிமை பொருத்திய இராணுவத்தாலும் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனதில் இருக்கும் சம்பவங்களையும் நினைவுகளையும் அழிக்க முடியாது.

இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலை ஆத்திரத்துடனும், மனவேதனையுடனும், விரக்தியுடனும் தமிழ் மக்களின் பிரதிநிகளாகிய நாம் பதிவு செய்கின்றோம்.

நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன், வி.இராதாகிருஷ்ணன், எம்.வேலு குமார் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இரா. சம்பந்தன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் சுகவீனம் காரணமாக நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காமையால் அவர்களின் கையொப்பம் பெறப்படவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் இதில் உடன்பாடு உண்டு என்ற நிலையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் கடிதத்துடன் உடன்பாடு இல்லாத காரணத்தால் இதில் கையொப்பமிட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.