தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அனைவருக்கும் உள்ளது – ரவி குமுதேஷ்

21 60863b806ee9c
21 60863b806ee9c

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அனைவருக்கும் உள்ளது என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போது சுகாதார அமைச்சின் செயற்பாடுகள், கொள்கை ரீதியான தீர்மானங்கள், நாட்டை முடக்குதல் ஆகிய விடயங்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன. அதன் விளைவுகளில் ஒன்றாக வசதிவாய்ப்புள்ளவர்களே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையொன்று உருவாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் வைத்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது உண்மையில் சுகாதார அமைச்சில் உள்ள குறைபாடாகும்.

ஏனெனில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அனைவருக்கும் உள்ளது. வரையறுக்கப்பட்ட தடுப்பூசிகளே உள்ள நிலையில், அதனை யாருக்கு வழங்குவதெனத் தீர்மானிக்கும்போது யாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் உரிய செயற்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

தடுப்பூசிக்கான அவசியத்தேவையுடைய பல முன்னரங்க ஊழியர்கள் இருக்கின்றார்கள் என்பதை மனதில்கொள்ளவேண்டும். எனவே மருத்துவப்பணியாளர்கள் வேலைநிறுத்தத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அனைத்திற்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியே பொறுப்புக்கூறவேண்டும் என தெரிவித்துள்ளார்.