தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிவருகின்றது. குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலுமே தொற்றாளர்கள் அதிகமாக இனம் காணப்படுகின்றார்கள்.
இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்களும் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களும் தங்களுடைய வேலை வாய்ப்பை இழந்துள்ளதுடன் தங்களுடைய வருமானத்தையும் முழுமையாக இழந்துள்ளனர்.
தற்பொழுது எமது நாட்டில் பாரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தோட்ட தொழிலாளர்களும் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிகின்றவர்களும் தொடர்ந்து தங்களுடைய கடமைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எனவே இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஏனெனில் இவர்கள் தொடர்ச்சியாக தொழில் செய்வதன் மூலமே அவர்களுடைய பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.