யாழ் நூலக எரிப்பு 1981 யூன் 1ல்தான் நடைபெற்றது-சீ.வீ.கே.சிவஞானம்

unnamed 13
unnamed 13


நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டம் என்பதும் யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 யூன் மாதம் முதலாம் திகதி இரவோடு இரவாக எரிக்கப்பட்டதும், யாழ்ப்பாண மாவட்ட சபைத் தேர்தல் 1981 யூன் நான்காம் திகதி நடைபெற்றதும் உறுதிப்படுத்தப்படுகின்றது என முன்னாள் வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.

மேலும் தனது ஊடக அறிக்கையில்….

1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாண மாநகர சபையில் பணியாற்ற தொடங்கியதிலிருந்து 1989 ஆம் ஆண்டு முன்கூட்டியே ஓய்வுபெற்ற காலத்தில் மட்டக்களப்பு மாநகர சபையில் கணக்காளராக பணியாற்றிய 1968 – 1972 வரையான நான்கு ஆண்டுகள் தவிர முழுக் காலத்திலும் யாழ்ப்பாண மாநகர சபையில் சேவையாற்றியவன். அதிலும் குறிப்பாக 1975 முதல் 1988 இறுதிவரை ஆணையாளராகவும், விசேட ஆணையாளராகவும் சேவையாற்றியவன். குறிப்பாக 1979 – 1983 நடுப் பகுதி தவிர, முழுக் காலத்திலும் தெரிவு செய்யப்பட்ட சபையின்றி மாநரக சபையை நிர்வகித்தவன். ஆகவே, யாழ்ப்பாண நூலகத்தின் அழிப்பு மற்றும் மீள்விப்பின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருந்தவன் நான். எனவே அதன் வரலாற்றில் நேரடி பற்கேற்பும், சாட்சியும் ஆனவன் என்ற வகையில் கடந்த காலத்தில் வேண்டப்பட்ட சரியான தெளிவுபடுத்தல்களை நான் வழங்கியே வந்துள்ளேன்.
ஆனால் இப்பொழுது உண்மைத் தரவுகள் திட்டமிட்டு திரிவுபடுத்தப்படுவது கவலையளிப்பதும் எரிச்சலூட்டுவதுமாக உள்ளது.

நூலகம் எரிக்கப்பட்ட நாளை ஒரு விவாதப் பொருளாக்கி பட்டிமன்றம் நடாத்தும் நிலைக்கு ஒரு சிலர் உள்ளாக்கியுள்ளனர். யாழ்ப்பாண பொது நூலகம் பற்றி எழுதும் அநேகமானோர் அது எரிக்கப்பட்டது 1981 யூன் முதலாம் திகதி இராப்பொழுது என்று எழுதும்போது, ஒரு சிலர் இல்லை 1981 மே மாதம் முப்பத்தொராம் திகதி என எழுதி இளைய சந்ததியினரிடையே குழுப்பத்தை உண்டாக்க முயல்கின்றனர்.
சூட்டுச் சம்பவம் நடைபெற்ற நாச்சிமார் கோவிலடி கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் என்றும், இச் சூட்டுச் சம்பவத்துக்கு முன்னரே நூலகம் எரிக்கப்பட்டு விட்டதாகவும், மாவட்ட சபைத் தேர்தல் 1981 மே 31 ஆம் திகதி நடைபெற்றதென்றும் பல குளறுபடியான, பொய்யான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டம் என்பதும் யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 யூன் மாதம் முதலாம் திகதி இரவோடு இரவாக எரிக்கப்பட்டதும், யாழ்ப்பாண மாவட்ட சபைத் தேர்தல் 1981 யூன் நான்காம் திகதி நடைபெற்றதும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இதுவரை கூறப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக இரண்டு விடயங்களை எம்முடன் சம காலத்தில் மாநகர சபையில் சேவையாற்றிய தீவிர தமிழ்த் தேசிய உணர்வாளரும், தமிழரசுக்கட்சியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவருமான உரும்பிராய் சா.ஆ.தருமரத்தினம் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் அப்படியே தரப்படுகின்றன.

நூலக எரிப்பு பற்றிய செய்தி வெளியிடப்பட்டமை
“1981 யாழ்ப்பாணம் அபிவிருத்தி சபைத் தேர்தல் அசம்பாவிதங்களின் போது தேர்தல் கடமை புரிவதற்காக அனுப்பப்பட்டிருந்த விசேட காவல்துறையினர் யாழ்.விளை யாட்டரங்கிலும், யாழ். மத்திய கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மே 31 ஆம் திகதி சம்பவத்திருந்த வன்செயல்களைத் தொடர்ந்து ஊடரங்குச் சட்டம் பிறப்பிக் கப்பட்டிருந்தது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் யாழ். பொது நூலகம் அதனது 98 ஆயிரம் தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளுடனும் 1981 யூன் முதலாம் நாள் நள்ளிரவினில் தீயினால் பொசுக்கப்பட்டது.”

“அப்பொழுது யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டு வந்த ஒரே நாளோடான “ஈழநாடு” பத்திரிகையும் சமகாலத்தில் அதே இரவில் எரிக்கப்பட்டிருந்தமையினால் தலைநகர் கொழும்பில் இருந்த அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஒன்றுதானும் யாழ். பொது நூலகம் தீக்கு இரையாக்கப்பட்ட செய்தியை பிரஸ்தாபியாது இருந்தமையினால் யாழ். நகருக்கு வெளியே யாழ்ப்பாண மாவட்டத்திலும் கூட வெறும் வதந்தியாக அது பரவியிருந்ததே தவிர செய்தியாக பிரஸ்தாபிக்கப்பட்டு இருக்கவில்லை.”

“தீவின் எந்தவோர் ஊடகமும் யாழ்.பொது நூலகம் தகனம் செய்யப்பட்டமையைச் செய்தியாக வெளியிடாதிருந்தமை கட்டுரையாளரைப் பெரிதும் வருத்திற்று. ஆகவே, மனித உரிமை நலன்களின் மீது பெரும் அற்பணிப்புடன் ஈடுபாடு கொண்ட வராகப் பணியாற்றி வந்த பண்டத்தரிப்புச் சட்டத்தரணி பி.எவ். சேவியரிடம் கட்டுரையாளர் அது விடயத்தைச் சுட்டிய போது இன்று மாலை 5.00 மணிக்கு முன் பாக யாழ். பொது நூலகத்தின் எரிந்து போன பாகங்களைக் காண்பிக்கும் ஒளிப் படப் பிரதிகளை என்னிடம் தருவாய் ஆகின் அவற்றிற்கான செலவினை யானே உனக்குத் தருவேன் என்றும், யாழ். பொது நூலகம் தகனம் செய்யப்பட்டதை உலகச் செய்தியாக மாற்றித் தருகிறேனா இல்லையா பார் என எனக்குச் சவால் விட்டார் சட்டத்தரணி சேவியர்.”
“கடல் படையினரது பிரசன்னத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி யாழ்.பொது நூலகத்தின் எரிந்து கொண்டிருந்த தோற்றத்தை காண்பிக்கும் ஒளிப்படங்களை தமது உத்தியோகத் தேவையின் பொருட்டாக எடுப்பித்திருந்தார் மாநகர ஆணையாளர் சீ.வீ.கே. சிவஞானம்.”

“அப்போது நிலவிய சூழ்நிலையில் யாரும் ஒளிப்படம் எடுப்பதற்கு யாழ்.பொது நூலகத்தை அண்மித்தல் அசாத்தியம் என்பதைப் புரிந்துகொண்ட கட்டுரையாளர் மாநகர ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானத்தை அணுகி சட்டத்தரணி சேவியர் கட்டுரையாளருக்கு விடுத்திருந்த சாவலை எடுத்துரைத்திருந்தார். உடனடியாகவே தொலைபேசி மூலம் தமக்கு எரிந்து போன நூலகத்தின் பல்வேறு தோற்றங்களையும் ஒளிப்படப் பிரதிகளை எடுத்துத் தந்தவரிடம் அவற்றின் மற்றும் ஒளிப் பிரதியை தமக்கும் தரும்படி அவரை பணித்து விட்டு தமது பாதுகாப்பில் வைத்திருந்த மேற்படி ஒளிப் படங்கள் உள்ளடக்கும் இரு புத்தகங்களையும் கட்டுரையாளரிடம் தந்தார். அவற்றில் இருந்து பெறப்பட ஒளிப்பட பிரதிகள் சட்டத்தரணி சேவியர் மூலம் அன்று மாலையே தலைநகர் கொழும்பு எடுத்துச் செல்லப்பட்டு மறுநாள் விமானத்தில் பயணித்த ஓர் இளம் சட்டத்தரணியிடம் சுங்கப் பரிசோதனைப் பீடத்தை அப்பயணி கடந்து சென்றதும் ஒப்படைக்கப்பட்டன. சென்னையில் மேற்படி ஒளிப்படங்களைப் பெற்றுக் கொண்ட மறவன்புலவு சச்சி (மறவன்புலோ சச்சிதானந்தன்) அவற்றிலிருந்து மேலும் பல பிரதிகளை அங்கு பெற்றுக் கொண்டதன் பின் தம்மால் கூட்டப்பட்டிருந்த சர்வதேச ஊடகவியலாளர் மாநாட்டில் ஒளிப்படங்களை ஆதாரமாகச் சமர்ப்பித்து தகவல் வெளியிட்டிருந்தார். மறுவிநாடியே தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் பெரிதான திரவிட சிற்பவியல் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த யாழ். பொது நூலகம் அதன் புத்தக சேர்வுகள் 98 ஆயிரம் தேடல்கரிய கையெழுத்து பிரதிகள் தீக்கி ரையாக்கப்பட்டமை உலகச் செய்தியாக மாறிவிட்டது. மேற்படி தகவல் செய்தியாக வெளியிடப்பட்டிராத அச்சு, வானொலி, ஒளிபரப்பு ஊடகங்களே கிடையாது. சர்வதேச சஞ்சிகைகள் யாவும் அதனை முதன்மைச் செய்தியாக பிரஸ்தாபித்திருந்தனர். மாநகர ஆணையாளர் சீ.வீ.கே. சிவஞானத்திடமிருந்து பெறப்பட்ட ஒளிப்படப் பிரதிகள் மூலமே அச்சாதனை நிலைநாட்டப்பட்டிருந்தது.”

நட்டஈடு வழங்கல்
“யாழ்.பொது நூலகத்திற்கு தனிநபர் ஆணைக்குழு (லயனல் பெர்னாண்டோ ஆணைக்குழு) பரிந்துரைத்திருந்த இழப்பீட்டுத் தொகை ஒரு கோடி 20 இலட்சம் ரூபா மட்டும் (ஒரு கோடி 5 இலட்சம்) (அவை போன்று, அவ்வவாறாக) அரசாங்கப் பணத்தில் இருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை. யாழ். பொது நூலகத்துக்கு அரசின் பணத்திலிருந்து நட்டஈடு தரப்படுவது யாழ். பொது நூலகத்தைத் தகனம் செய்த குற்றப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருக்கும் என்பதால் போலும் அவற்றுக்கு மாறாக குடியரசு தலைவர் நம்பிக்கையை நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபா தொகையை விடுவித்து வங்கியில் குடியரசுத் தலைவரின் பெயரில் யாழ். பொது நூலகப் புன ரமைப்பு நிதி எனும் ஒரு புதிய கணக்கினைத் திறந்து அதிலிருந்து பெறப்பட்ட 9 இலட்சம் ரூபாவிற்கான காசோலையை குடியரசுத் தலைவரின் நிவாரண நிதியாக அனுப்பியிருந்தார். ஆயின் மாநகர ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் பெறப்பட்ட அத்தொகைக்கான பற்றுச்சீட்டில் “வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டின் ஒரு பாகமாகவே ஏற்றுக் கொண்டிருந்தார். பற்றுச்சீட்டில் அவ்வாறாக குறிப்பிட்டிருந்தார்.” என்று திரு. சா.ஆ. தருமரத்தினம் அவர்கள் 2013 இல் வெளியிட்ட தமது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இவர் இப்பொழுது கொழும்பில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : லயனல் பெர்னாண்டோ விசாரணைக்குழு சிபார்சு செய்த நட்டஈடான ஒரு கோடி 5 இலட்சம் ரூபாவில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து 20 இலட்சம் ரூபாவே மாநகர சபைக்கு வழங்கப்பட்டது என அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.