தொடரை வென்றது இந்தியா!

large samiytt 43431
large samiytt 43431

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.

கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ஓட்டங்களை குவித்தது.

இந்தியா அணியின் பந்துவீச்சில், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளையும், சர்துல் தாகூர், மொஹமட் ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 316 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

இந்தியா அணி, 48.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதனால் இந்தியா அணி, 4 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கீமோ போல் 3 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரெல், ஜேஸன் ஹோல்டர், அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோஹ்லியும், தொடரின் நாயகனாக ரோஹித் சர்மாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை ஏற்கனவே 20க்கு 20 தொடரை இழந்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணி தற்பொழுது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .