நாட்டில் எந்த நேரத்திலும் நிலைமை மோசமாகலாம் – கெஹலிய

keheliya rambukwella 1
keheliya rambukwella 1

“இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.” இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் கடந்த காலத்தை விடவும் குறிப்பிட்ட அளவு ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. புதிய வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், மக்களின் செயற்பாடுகளில் முழுமையான திருப்தி இல்லை. இலக்கை நோக்கி எம்மால் பயணிக்க முடிந்த போதிலும் இலக்கைத் தக்கவைக்க முடியவில்லை. அதற்கு மக்களின் செயற்பாடுகளே காரணமாகும்.

மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எம்மால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சுகாதார அமைச்சு, சுகாதாரப் பணியகம் மூலமாக பல்வேறு சுகாதார வழிகாட்டிகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் அதனை முழுமையாகப் பின்பற்றுவதில் சந்தேகம் உள்ளது. ஒரு சிறிய குழு தவறு செய்கின்றது.

இதனால் பெருமளவிலான மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை சகலரும் கவனத்தில்கொள்ள வேண்டும். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால், எப்போதும் மீண்டும் மோசமான கொரோனாத் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் போராடுகின்றோம் என்பதை சகலரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.