ராஜித்தவின் 8 கப்பல்கள் விவகாரம் : ஆவணங்களை சி.ஐ.டி.யினரிடம் கையளிக்க உத்தரவு!

1 V Rajitha
1 V Rajitha

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, மீன்பிடி அமைச்சராக இருந்த போது, அவரது இணைப்புச் செயலாளராக இருந்த ஒருவரின் பெயரில் ஆழ் கடலில் மீன் பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்க என, 8 மீன் பிடி கப்பல்களை தருவித்தமை, முகத்துவாரம் மீன் பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பிலான நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான விடயத்தில், இலஞ்ச ஊழல் ஆணைக் குழு பொறுப்பிலுள்ள ஆவணங்களை உடனடியாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்க நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம பிறப்பித்தார்.

நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த விவகாரம் தொடர்பிலான குற்றவியல் விசாரணைக்கான வழக்குக் கோவையை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைத்து விடயங்களை முன்வைத்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விவகார விசாரணைகளுக்கு அவசியமான ஆவணங்கள், மீன் பிடி அமைச்சில் இல்லை எனவும், அவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பொறுப்பில் உள்ளதாகவும் இதன்போது சி.ஐ.டி. அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

எனவே அந்த ஆவணங்களை மேலதிக விசாரணைக்களுக்காக, சி.ஐ.டி.யிடம் கையளிக்க , இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த அதிகாரிகள் கோரினர்.

இதனையடுத்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக , முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மீன் பிடி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 8 கப்பல்களை தருவித்தமை மற்றும் முகத்துவாரம் மீன் பிடித் துறைமுகம் குத்தகைக்கு விடப்பட்ட விவகாரம் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறி, சி.ஐ.டி. கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் வசிக்கும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா இது குறித்த முறைப்பாட்டை சி.ஐ.டி.க்கு அளித்திருந்த நிலையில், அதனை மையப்படுத்தி இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.

முன்னாள் மீன் பிடித் துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் இணைப்புச் செயலராக கடமையாற்றிய தொன் லலித் அனுராத செனவிரத்ன எனும் நபரின் பெயரில் இந்த 8 கப்பல்களும் சீன நிறுவனம் ஒன்றுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றுக்கு அமைய இந் நாட்டுக்கு தருவிக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு நாட்டுக்கு வழங்லப்பட்டுள்ள கொள்ளளவில் 50 சதவீதத்தை மட்டுமே இலங்கை பயன்படுத்துவதாகவும், இவ்வறு மீனவர்களின் உரிமைகளை பலாத்காரமாக கைப்பற்றி, சீன நிறுவனத்திற்கு அந்த உரிமையை குத்தகைக்கு விட்டு, தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் வண்ணம் அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.