எதிர்வரும் வருடம் நிச்சயம் முழு நாடும் உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும். அதனால் விவசாயத்துறையுடன் தொடர்புடைய தரப்பினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கது. நல்லாட்சி அரசாங்கத்திலும் சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட்டது. ஒரு தடவையில் இரசாயன உரம் தடை பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டதனால் விவசாயத்துறை பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார மற்றும் துறைசார் நிபுணர்களின் எதிர்வு கூறலை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன்.
சேதன பசளைகளையும், இரசாயன பசளைகளையும் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். விவசாய பிரதேசங்களில் வாழும் மக்களின் நிலையினை எம்மால் நன்கு உணர முடிகிறது. விவசாயிகள் மாத்திரம் எதிர்கொண்ட பிரச்சினையை இனி வரும் காலங்களில் ஒட்டுமொத்த மக்களும் எதிர்க்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார்.