காவல் துறையில் விக்கிக்கு எதிராக முறைப்பாடு!

Eluha Tamil விக்கி
Eluha Tamil விக்கி


தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் காவல் துறையில் முறைப்பாடு செய்துள்ளார்

சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார.

ஓகஸ்ட் 30 2020 அன்று இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளின் மூலம் விக்னேஸ்வரன் மோசமான கருத்துக்களை வெளியிட்டதாக தர்ஷன வெரதுவேஜ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று விக்னேஸ்வரன் தெரிவித்தாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான விக்னேஸ்வரன் இலங்கை ராணுவத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும் வடக்கு மாகாணத்தில் புத்தர் சிலைகள் தன்னிச்சையாக நிறுவப்படுவதாகக் கூறி விக்னேஸ்வரனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்) சட்டம் எண் 3 (1) இன் கீழ், 2007 இன் 56, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (1) (எச்) மற்றும் தண்டனைச் சட்டத்தின் 120 மற்றும் 290 (பி) பிரிவுகளின் கீழ் விக்னேஸ்வரன் தண்டனைக்குரிய குற்றங்களை செய்ததாக தனது காவல் துறை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள சட்டத் தரணி தர்ஷன வெரதுவேஜ், விக்னேஸ்வரனுக்கு எதிராக உடனடியாக விசாரணையைத் தொடங்கவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.