படிப்பை தொடர்ந்திருந்தால் நாட்டின் சிறந்த சொத்துக்கள் இவர்களே – க.வி.விக்னேஸ்வரன்

1111
1111

படிப்பை தொடர முடிந்திருந்தால் புலிகள் அமைப்பில் இருந்த அறிவாளிகள் இந்த நாட்டுக்கு சிறந்த சொத்தாக இருந்திருப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1958இல் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளே சிறுவனாக இருந்த பிரபாகரனின் மனதை மாற்றியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் புலிகளை பயங்கரவாத இயக்கம் என தரப்படுத்தியிருக்கின்றனர். நீங்கள் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்கிறீர்கள். ஆனால் அவர்கள் இரு தேசிய தலைவர்கள் இருவர் உள்ளிட்ட பலரை கொலை செய்தனர், தற்கொலைப் படையை உருவாக்கினார்கள், மனித குண்டுகளாக பெண்களை மாற்றினர், சிறுவர்களை போர் வீரர்கள் ஆக்கினர். இது பற்றி கூறமுடியுமா..? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கெப்பட்டிபொல திசாவயை பிரிட்டிஷார் ஆபத்தான கிரிமினல் என்று தரப்படுத்தினார்கள். ஆனால் அவரை தேசிய ஹீரோவாக கருதுகிறோம் ஏன்? பிரிட்டிஷார் நட்டுக்குள்ளே நுழைந்தவர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள் எமது வளங்களை சூறையாடியவர்கள்.

மேலும் எமது வணக்கஸ்தலங்களை அழித்தவர்கள், எமது காணிகளை கைப்பற்றியவர்கள். எனவே கெப்படிபொல உயர்குடியை சேர்ந்தவராக இருந்த போதும் ஊவா கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டார். அவரை நாம் ஹீரோ என்கின்றோம்.

ஆனால் பயங்கரவாதி என்ற சொல்லின் அர்த்தம் பிரிட்டிஷாருக்கு தெரிந்திருந்தால் அவர்கள் கெப்பிட்டிபொலவை அவ்வாறுதான் அழைத்திருப்பார்கள்.

1961ஆம் ஆண்டு அளவில், இராணுவம் வடக்கிற்கு அனுப்பப்பட்டது. கேர்ணல் உடுகமவின் கீழ் என்று நினைக்கின்றேன். அப்போதைய அரசாங்கங்கள் செய்த தவறுகளுக்கு அமைதியாக தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தமைக்காகவே இராணுவம் அங்கு அனுப்பப்பட்டது. அரசாங்கத்தின் கைக்கூலியாக அப்போது இயங்கிய பஸ்தியாம்பிள்ளையை புலிகள் கொன்றனர்.

அமெரிக்காவை விட்டு விடுங்கள், அரசாங்கமல்லவா? சட்ட மா அதிபர் அல்லவா? இவ்வாறு பயங்கரவாதி என்று தரப்படுத்தியது. அரசாங்கம் இவ்வாறு கூறியதை பின்பற்றியே வெளிநாடுகளும் வெளிநாட்டு நிறுவனங்களும் அவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரித்தன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .