நினைவுகூரும் அடிப்படை உரிமையை தடுக்க முடியாது – இரா.சம்பந்தன்

sammanthan
sammanthan

விடுதலைக்கான பயணத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும். அதனை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவுகூரலுக்கு வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் ஊடாக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறுதெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூருவது அனைவருக்கும் உள்ள உரிமையாகும்.

அது அடிப்படை உரிமையும் கூட. அதனை யரும் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் பல்வேறு தருணங்களில் அவ்வாறான நினைவு கூரல்களை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். அதற்கு தடைகளை ஏற்படுத்த முடியாது.

இவ்வாறான நிலையில் தற்போதைய சூழலில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவை.சேனாதிராஜா முன்னெடுத்துள்ளார்.

இவ்விதமான விடயங்களில் எம்மிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது. அதனடிப்படையில் அவர் முன்னெடுத்துள்ள செயற்பாடானது பாராட்டத்தக்கதாகும். மேலும் தொடர்ச்சியாக பொதுவிடயங்களில் ஒற்றுமையாக செயற்பட வேண்டியதும் அவசியமாகின்றது என்றார்.