தியாக தீபம் திலீபனின் நினைவுகூரலுக்கு மேலும் 14 நாள்கள் தடை!

thilipan anna
thilipan anna

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால் முடியாது என்று கட்டளையிடப்பட்டது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரிய மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார், கஜேந்திரன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன், முன்னாள் மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க. சுகாஷ், அரசியல் செயற்பாட்டாளர் க.விஸ்னுகாந்த், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன், தமிழ் அரசுக் கட்சியின் பிருந்தாபன் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை (செப்.14) அழைக்கப்பட்டது.

பொலிஸாரின் விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.

அத்தோடு வழக்கு செப்ரெம்பர் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் பிரதிவாதிகள் 20 பேரையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை வழங்கியிருந்தது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 21ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் சார்பில் சட்டத்தரணி கணதீபன் முன்னிலையாகினார்.

அத்துடன், மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் ஆகியோர் இலங்கை குற்றவியல் நடைபடி சட்டக்கோவையின் 106 பிரிவின் 4ஆம் உப பிரிவின் கீழ் இந்த வழக்கை பொலிஸார் தாக்கல் செய்தமை தவறு என்று சட்ட ஏற்பாடுகள், முற்தீர்ப்புகளை வைத்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர். அதனால் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அவர்கள் மன்றுரைத்தனர்.

தியாக தீபம் திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் என நிரூபிக்க அவரது வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து யாழ்ப்பாணம் தலைமகயகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமர்ப்பணம் செய்திருந்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று யாழ்ப்பாணம் மாநகர் முதல்வர் உள்ளிட்ட இருவரது சமர்ப்பணங்களை முன்வைக்கும் வாய்ப்பை தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், கட்டளை இன்று (செப்.24) வியாழக்கிழமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்தமுடிவு அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை தமிழ் தேசியத்தின் பற் பற்றுக்கொண்ட அனைத்து கட்சிசிகளும் இன்றைய தினம் மீண்டும் ஒன்று கூடவுள்ள நிலையில் குறித்த முடிவு வெளியாகியுள்ளதோடு குறித்த முடிவுக்கு எதிராக எதிர்வரும் திங்கற்கிழமை வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய முழுக்கதவடைப்பு போராட்டம் ஒன்றும்நடைபெற ஏற்படகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .