ஒற்றுமையே பலம்! இதுவே ஹர்த்தால் போராட்ட வெற்றி- சரவணபவன்

.சரவணபவன்
.சரவணபவன்

ஒற்றுமையே பலம்! இதுவே ஹர்த்தால் போராட்ட வெற்றி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தபோதும், தமிழர் தாயகப்பகுதிகளில் நேற்று பூரண ஹர்த்தால் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நேற்றைய ஹர்த்தாலானது ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் தலைமையில் எமது மக்களும், எமது உரிமைகளுக்காகப் போராட ஐக்கியப்பட்ட சக்தியாக எழுச்சி பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை சிங்கள அரசுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தியுள்ளது.

நாம் உரிமையுள்ள இனமாக வாழவும், இன அழிப்பிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்ட உறுதியான தமிழ்த் தலைமைகளின் ஐக்கியத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களே ஒரே ஆயுதம் என்பதை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.

மேலும் எழுச்சிகரமான பூரண ஹர்த்தால் போராட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு எமது உரிமைப் போராட்டத்தையும் தொடர்ந்து எமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் உடைத்தெறிந்து நீதிக்கான நெடும்பயணத்தில் முன் செல்வோம் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் என மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.