வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்ல வனவளத்திணைக்களமும் தடை விதித்தது!

v
v

நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு நெடுங்கேணி காவல் துறை மற்றும் தொல்பொருட்திணைக்களங்களால் தடை ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வனவளத்திணைக்களமும் தமது அட்டகாசத்தை ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் நேற்றையதினம் ஆலயத்திற்கு சென்ற பொதுமக்களை நெடுங்கேணி பிரிவை சேர்ந்த வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆலயத்திற்கு செல்லவிடாமல் தடுத்துள்ளதுடன், அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். நேற்று விடுமுறை தினமாதலால் அதிகமான பொதுமக்கள் ஆலயத்தை தரிசிக்க சென்ற நிலையில் வனவளத்திணைக்களத்தின் செயற்பாட்டினால் அவர்கள் ஏமாற்றத்துடன், திரும்பியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இதுவரை ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களம் மற்றும் நெடுங்கேணி காவல் துறையினருமே தடையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது வனவளத்திணைக்களமும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஆலயம் தொடர்பாக நெடுங்கேணி காவல் துறையால் தொடரப்பட்ட வழக்கு வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில் அதனையும் பொருட்படுத்தாமல் அரச திணைக்களங்களால் இவ்வாறான தடை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


வெடுக்குநாறி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அங்கு செல்வதற்கும் பொதுமக்கள் மற்றும் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் வாதிகளும் அக்கறையற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த வாரமளவில் கூட ஆலயத்தில் நீண்டகாலமாக பூசை செய்து வந்த பூசாரியை ஆலய வளாகத்திற்குள் செல்லவேண்டாம் என்றும், சென்றால் கைதுசெய்வோம் என்றும் நெடுங்கேணி காவல் துறையினர் அச்சுறுத்தியிருந்தனர்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஆலயத்தினை அபகரிப்பதற்காக பல்வேறு நெருக்குதல்களும், தடைகளும் தொல்பொருட்திணைக்களம் மற்றும் நெடுங்கேணி காவல் துறையினரால் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விடயங்கள் தொடர்பாக அரசியல் வாதிகள் அக்கறை செலுத்தாமல் நழுவிச்செல்வதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.