தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் சீ.வீ.கே!

Sivagnanam
Sivagnanam

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சீ.வீ.கே. சிவஞானம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரான சீ.வீ.கே. சிவஞானம் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்த நிலையில் ஒழுக்காற்றுக் குழுவின் நடவடிக்கையாக கட்சியின் இரு சிரேஷ்ட உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் தொடர்பிலும், கட்சியின் இரு இடைநிலை உறுப்பினர்களான சி.ஹரிகரன், க.குணாளன் தொடர்பிலும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார்.

இதனடிப்படையில் இரு சிரேஷ்ட உறுப்பினர்களும் எதிர்காலத்தில் கட்சிக்கு முரண்பட்ட விதத்தில் கருத்திட வேண்டாம் எனவும், இரு இடைநிலை உறுப்பினர்களையும் ஒரு வருடம் கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாகவும் கடந்த 6ஆம் திகதிய கடித மூலம் சீ.வீ.கே. அறிவித்திருந்தார்.

இவ்வாறு வழங்கிய கடிதம் அதிகாரம் உள்ளதா? பொதுச் சபை அல்லது கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதி பெறப்பட்டதா? என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விமர்சனங்களின் மத்தியில் கட்சியில் இருந்து உறுப்பினர்களை இடைநிறுத்தும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உரியதா? அல்லது ஒழுக்காற்றுக் குழுவுக்கு உரியதா? எனவும், இதற்கான அனுமதி யார் வழங்குவது? போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்தநிலையில், தற்போது குறித்த ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பதிவுத் தபாலின் மூலம் கட்சியின் தலைமைக்கு சீ.வீ.கே. அறிவித்துள்ளார்.