வடக்கு,கிழக்கை முழுமையாக பொறுப்பேற்க அரசு திட்டமிடுகிறதா? – கேள்வி எழுப்பும் விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கை முழுமையாகத் தாமே பொறுப்பேற்று நடத்தத் அரசு திட்டமிட்டிருக்கின்றதா? என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாராந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் முழுவடிவம் பின்வருமாறு,

கேள்வி :- இன்று நடந்த கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டக்கூட்டத்தில் நீங்கள் சில முக்கியமான கருத்துக்களை ஆங்கிலத்தில் எடுத்துரைத்தீர்கள். அவற்றைத் தமிழில் தரமுடியுமா? வேண்டுமெனில் அவற்றிற்கு மேலதிகமாக ஏதேனும் கூற வேண்டுமென்றால் அதனையும் உள்ளடக்கலாம்.

பதில் :- நன்றி. முதலாவதாக சிரேஹ்ட அமைச்சர்கள் சமல் இராஜபக்ச மற்றும் டலஸ் அழகப்பெரும வருவதாக அறிவித்து அவர்கள் வராததைச் சுட்டிக்காட்டினேன். ஒரு வேளை வராததற்குக் காரணம் இந்தக் கூட்டத்திற்கு அவர்கள் போதிய முக்கியத்துவத்தைக் கொடுக்காததாக இருக்கலாம் என்றேன். காரணம் இந்தக் கூட்டம் தற்போதைய மத்திய அரசாங்கம் தாம் வடக்கில் செய்யவிருப்பதை அறிவிக்கவே நடந்தது.

பல மத்திய அரசாங்க செயலாளர்கள் இங்கு வந்து தாம் செய்யப் போவதைக் கூறினார்கள். ஆனால் சொல்வதெல்லாம் மத்தி செய்வதில்லை. நிதிகளைத் திசைமாறிச் செல்லச் செய்தல். மத்திய அரசாங்கத்தின் அசிரத்தை, எமது அலுவலர்களின் தாமதங்கள் போன்ற பல காரணங்கள் எமது செயற்றிட்டங்கள் தாமதமாகக் காரணிகளாக இருந்திருக்கின்றன. ஆகவே இந்தக் கூட்டத்தின் குறிக்கோள் என்ன என்ற கேள்வி எழுகின்றது என்றேன்.

மத்திய அரசாங்கத்தின் ஒரு தலைப்பட்சமான குறிக்கோள்களை எங்களுக்குத் தெரிவிக்கத்தான் இந்தக்கூட்டம் நடந்தது போல் தெரிகின்றது. எம்முடன் கலந்தாலோசிக்காமல் எமக்கு என்ன செய்யப் போகின்றோம் என்று கூறியுள்ளீர்கள் என்றேன். அடுத்து அரசியல் யாப்பின்படி மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம், உள்ளுராட்சி ஆகியன ஆட்சிக்குப் பொறுப்பாக இருக்கின்றன.மூன்று அடுக்குகளில் அவையுள்ளன.மத்திய அரசாங்கம்,மாகாண அரசாங்கம் ஆகியவற்றின் அதிகாரங்கள் அரசியல்யாப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.உள்ளுராட்சி சபைகள் மாகாண அரசாங்கத்தின் ஊடாகவே மத்தியால் கையாளப்பட வேண்டும். அப்படி இல்லாமல் நேரடியாக மத்தியானது உள்ளுராட்சி சபைகளுடன் நேரடித்தொடர்பு வைக்கப் பார்ப்பது எமக்கு சந்தேகத்தை எழுப்புகின்றது.

மாகாண சபையைப் புறந்தள்ளி உள்ளுராட்சி சபைகளுடன் தொடர்பு வைக்க அரசாங்கம் எண்ணியுள்ளதா? அப்படியானால் தேர்தல் நடத்தாமல் மாகாணசபைகளை இல்லாமல் ஆக்குவது தான் உங்கள் கொள்கையா? இது பற்றி உத்தியோகபூர்வமாக நீங்கள் உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றேன்.

இன்று மத்தியால் வடக்கில் செயற்படுத்தப்படப்போகும் சில திட்டங்கள் குறிப்பிடப்பட்டன. முக்கியமாக நாடு பூராகவும் செய்யவிருப்பதையே செயலாளர்கள் கூறினார்கள். அவர்கள் முழுநாட்டின் ஒரு சிறிய பகுதியாகவே எம்மைக் கருதி தமது கருத்துக்களை வெளியிட்டார்கள். இதிலிருந்து மத்தியானது வடக்கு கிழக்கை முழுமையாகத் தாமே பொறுப்பேற்று நடத்தத் திட்டமிட்டிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

முன்னர் ரணில் கூட “கிராம உதயம்” என்றோ இன்னொரு பெயர் கொண்டோ உள்ளுராட்சி சபைகளுடன் நேரடியாக உறவுகொள்ள முயன்றார். மாகாணசபைக்கு ஊடாக நடக்க வேண்டிய காரியங்களை மத்தியானது தாமாக நேரடியாக செய்யவிழைவது மாகாணசபைகளை ஓரங்கட்ட எடுக்கப்படும் நிகழ்வாகவே நாம் காண்கின்றோம் என்றேன்.

வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாகக கிராமமட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது போலத் தெரிகின்றது என்றேன். இதற்கு சிங்களத்தில் பதில் அளித்த அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ ஐ.தே.க. தான் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாது இருந்து வந்தது. நாம் அப்படியில்லை என்றார். ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறவில்லை. மேலும் அபிவிருத்தியே எமது கரிசனை. இங்கு அரசியல் பேசாது அபிவிருத்தி பற்றிப் பேசுவோம் என்றார். அதற்கு நான் அபிவிருத்தி என்ற போர்வையில் தானே மகாவெலி அதிகாரசபை உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று வரையில ஒரு சொட்டு மகாவெலி நீர் எமக்குக் கிடைக்கவில்லை. இனியும் கிடையாது என்றே எமது எந்திரிகள் கூறுகின்றார்கள்.

அபிவிருத்தி என்ற போர்வையில் அரசியல் நடத்தப்படுவதை நாம் அறிவோம் என்றேன். மேலதிகமாக எனது கருத்து – அவசர அவசரமாக இந்தக் கொரோனாக் காலத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தி மத்திய அரசாங்கம் எதனை வடக்கில் செய்யவிருக்கின்றது என்று எங்களுக்குத் தெரிவிப்பது, இனிமேல் (அதாவது 20வது திருத்தச் சட்டத்தின் பின்) தாம் நினைத்ததை இங்கு செய்யப் போகின்றோம் என்று கட்டியம் கூறுவது போல் தென்படுகின்றது. வடகிழக்கு மக்கள் தம்மைத் தயார்ப்படுத்த வேண்டிய காலம் உதயமாகிக் கொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.