எம்மை கைது செய்தால் செய்யட்டும் ஆனால் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவோம் -சிவாஜிலிங்கம்

vlcsnap 2020 11 18 12h54m25s739
vlcsnap 2020 11 18 12h54m25s739

எம்மை கைது செய்தால் கைது செய்யட்டும் ஆனால் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவோம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (18) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது,

மாவீரர்தினத்தை அனுட்டிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரள வேண்டும். எமது அடிப்படை உரிமையை நிறைவேற்ற யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை. மாவீரர்தின அஞ்சலியை அரசு தடுக்க நினைக்கக்கூடாது. தடுக்க நினைத்து எம்மை கைது செய்தால் விடுதலையாகும் வரை தினமும் அஞ்சலி செய்வோம்.

அத்துடன், அஞ்சலி நிகழ்விற்கு தடைகள் ஏற்பட்டால் அதை உடைப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிற்க வேண்டும். மக்களை முன்னால் அனுப்பிவிட்டு பதுங்கியிருக்ககூடாது.

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினம் இம்முறை அனுஷ்டிக்கப்படுமா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மாவீரர் தினத்தை அனுட்டித்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்,தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் எச்சரித்திருந்தார்.

சில விடயம்தான் கேட்டுச் செய்வது. எங்களின் அடிப்படை உரிமைகளை யாரிடமும் கேட்டுப் பெறவில்லை. உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதை ஐ.நா மனித உரிமைகள் சாசனம் அங்கீகரிக்கிறது.

நினைவுகூர்வதற்கு யாருடைய அனுமதியையும் நாம் பெற வேண்டியதில்லை. நினைவுகூர்வது ஒவ்வொரு மனிதர்களுடைய , சமுதாயத்தினுடைய, இனத்தினுடைய அடிப்படை உரிமை. தமிழ் தேசிய இனவிடுதலை  போராட்டத்தில் உயிரை தியாகம் செய்தவர்களை நினவுகூர, அவர்களின் பெற்றோர், உறவினர்களிற்கு மாத்திரமல்ல, ஒவ்வொரு தமிழனிற்கும், தமிழிச்சிக்கும் உரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள்தான் இதில் அக்கறை காட்ட வேண்டுமென்றில்லை, நாங்கள் தமிழர்கள் உரிமைபெற்ற இனமாக வாழப்போகிறோமா என்பதற்கான அமிலப்பரிசோதனை எங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் நாம் தோல்வியடைந்தால் எதிர்காலத்தில் தமிழினத்தின் விடுதலை சார்பில் எந்த விடயத்தையும் கோருவதற்கான தார்மீக உரிமையை இழக்கின்றோம்.

இலங்கை அரசிடம் நாம் கேட்பது, இலங்கை பிரதமர் மஹிந்தவின் பிறந்தநாள். ஜனாதிபதி பதிவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகிறது இந்த அருமையான சந்தர்ப்பத்தை பாவித்து, மாவீரர் தினத்தை தடுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

அப்படியான முடிவை எடுப்பதன் மூலம்தான் தேசிய நல்லிணக்கத்தையோ, இன ஒற்றுமையையோ ஏற்படுத்தி முடியும். இதைவிடுத்து, தடுக்க வேண்டுமென, முப்படையினர், புலனாய்வாளர்களை பாவித்து அச்சுறுத்துவது தவறான நடவடிக்கை.

வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்திலுளள் பல துயிலுமில்லங்கள் இராணுவ முகாமாக மாற்றி விட்டனர். எஞ்சியுள்ள துயிலுமில்லங்களில் அஞ்சலிக்கும் உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. 27ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூட வேண்டும். எந்ததடைகள் வந்தாலும் உடைத்தெறிய வேண்டும். இந்த தடையுடைப்பில் அரசியல் தலைவர்கள் முன்னணியில் இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்னால் பதுங்கியிருந்தடி , மற்றவர்களை போகுமாறு கேட்க முடியாது.

என்ன விளைவு வந்தாலும், கைது செய்யப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டாலும் அஞ்சலியை கைவிடமாட்டோம் என்ற உறுதியுடன் மாவீரர்நாளை அனுட்டிக்க முன்வர வேண்டும்.

அரசுக்கும், சர்தேச சமூகத்திற்கும் நாம் சொல்வது மாவீரர்தினத்தை கைவிட முடியாது. அனுஷ்டித்தே தீருவோம். ஆயிரக்கணக்கில் மக்களை கைது செய்ய முடியாமல், எங்களில் சிலரை கைது  செய்து சிறையில் அடைத்தாலென்ன, தனிமைப்படுத்தினாலென்ன நாம் அஞ்சலியை தொடர்வோம். கைது செய்து சிறையில் அடைத்தால் விடுவிக்கப்படும் வரை, சிறையிலிருந்தபடி விளக்கேற்றுவோம். அதற்கு வசதியில்லாவிட்டால் அஞ்சலி நிகழ்வை நடத்துவோம். தனிமைப்படுத்திய இடத்தில் நின்றும் அஞ்சலிப்போம்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட படைவீரர்களிற்கு பொப்பிமலர் தினம் நவம்பர் மாதம் அனுட்டிக்கப்படுகிறது. இலங்கை படையினரும் அஞ்சலி செலுத்துகிறார்கள். இலங்கை அரசுக்கு எதிராக போராடிய தீவிரவாத அமைப்பான ஜேவிபி, கார்த்திகை 13ஐ கார்த்திகை வீரர்கள் தினமாக அனுட்டிக்கிறது. சிங்களவர்களற்கு ஒருநீதி. தமிழர்களிற்கு ஒரு நீதியா? அப்படியென்றால் இங்கு இரண்டு நாடுகள் உள்ளது என்பதை இலங்கை அரசே ஒப்புக்கெள்கிறதா?

உறவுகளை இழந்தவர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அஞ்சலி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் நேர மாற்றம் ஏற்பட்டு, பகலில் அஞ்சலி நடந்தால் அந்த இடங்களில் பொதுமக்கள் சென்று அஞ்சலிக்க வேண்டும்.

என்ன தடை வந்தாலும் நாம் அஞ்சலி நிகழ்வை செய்தே முடிக்க வேண்டும். இல்லை, அமிலப்பரிசோதனையில் நாம் தோற்போமாக இருந்தால் எதிர்காலத்தில் எந்தவித நினைவுநாளையும் நாம் அனுட்டிக்க முடியாமல் போகும் என தெரிவித்துள்ளார்.